தேமுதிக-பாஜக கூட்டணிக்கு வாய்ப்பு: கணேசன்
சென்னை: தேமுதிகவுடன் பாஜகவுக்கு கூட்டணி ஏற்பட வாய்ப்புள்ளதாக பாஜக மாநிலத் தலைவர் இல.கணேசன் கூறியுள்ளார்.
தமிழக பாஜக பெண் நிர்வாகிகளுக்கான பயிற்சி முகாம் இன்று சென்னையில் நடந்தது. பொதுச் செயலாளர் தமிழிசை செளந்திரராஜன், மகளிர் அணி தலைவி சுஜாதா ராவ், மகளிரணி பொதுச் செயலாளர் வானதி சீனிவாசன், மாநில துணைத் தலைவர்கள் லலிதா சுபாஷ், கிரேஸி சேவியர், முனவரி பேகம் உள்ளிட்ட நிர்வாகிகள் இதில் பங்கேற்றனர்.
அகில இந்திய பொறுப்பாளர்களான மோகினி கர்க், வினய், நிஷி கந்தா அகியோர் பயிற்சி அளித்தனர்.
இக் கூட்டத்துக்குப் பின் தமிழக பாஜக தலைவர் இல.கணேசன் நிருபர்களிடம் பேசுகையி்ல்,
அமர்நாத் கோவில் பிரச்சனை மத பிரச்சனை அல்ல. ஜம்மு-காஷ்மீர் பிரச்சனையும் அல்ல. இது பிரிவினைவாதிகளுக்கும், தேசியவாதிகளுக்கும் இடையே நடக்கும் மோதல்.
சுதந்திர தினத்தன்று லால் சவுக்கில் ஏற்றப்பட்ட தேசிய கொடியை பிரிவினைவாதிகள் இறக்கி, தீவைத்து கொளுத்தினார்கள். இந்தியாவுக்கு எதிராக கோஷம் எழுப்பினார்கள்.பிரிவினைவாதிகளுக்கு எதிராக ஒரு மாதமாக தேசிய கொடி ஏந்தி அங்குள்ள மக்கள் போராடி வருகிறார்கள். இதை மதரீதியாக சித்தரிக்கிறது காங்கிரஸ். மதவாதத்தை தூண்டிவிட்டு வாக்கு வங்கி அரசியல் நடத்தப் பார்க்கிறார்கள். காங்கிரசின் இந்த வேஷம் கிழிக்கப்படும்.
தமிழ்நாட்டில் எந்த கட்சியும், யாருடன் கூட்டணி அமைப்பது என்று இன்னும் உறுதியான முடிவுக்கு வரவில்லை.
திமுக அணியுடன் பாஜக சேராது. தேமுதிகவுடன் கூட்டணி ஏற்பட வாய்ப்புள்ளது. அதிமுகவுடன் கூட்டணி வருமா என்பதையும் இப்போது சொல்ல முடியாது. போகப் போகத் தெரியும் என்றார்.