முதல்வருக்கு எதிர்ப்பு: அமெரிக்கன் கல்லூரி மாணவர்கள் ரகளை - தடியடி

மதுரை அமெரிக்கன் கல்லூரி முதல்வராக இருந்தவர் சின்னராஜ் ஜோசப் ஜெயக்குமார். இவரை கடந்த ஏப்ரல் மாதம் நடந்த ஆட்சி மன்றக் குழு கூட்டத்தில் சஸ்பெண்ட் செய்து முடிவெடுக்கப்பட்டது. ஆட்சிமன்றக் குழுத் தலைவராக இருப்பவர் பிஷப் கிறிஸ்டோபர் ஆசிர்.
புதிய முதல்வராக ஜார்ஜ் செல்வக்குமார் நியமிக்கப்பட்டார். இதற்கு சின்னராஜ் ஜோசப் எதிர்ப்பு தெரிவித்தார். இதுதொடர்பாக கோர்ட்டிலும் வழக்கு தொடரப்பட்டது.
முதல்வர் அறைக்கு பிஷப் தரப்பும், சின்னராஜ் தரப்பும் தனித் தனியாக பூட்டுப் போட்டு பூட்டினர்.
இந்த நிலையில் சின்னராஜ் ஜோசப்புக்கு சாதகமாக கல்லூரிக் கல்வி இயக்குநரகம் உத்தரவிட்டது. அவரே முதல்வர் பதவியில் நீடிக்கலாம் எனவும் சின்னராஜ் ஜோசப்புக்கு அனுமதி அளிக்கப்பட்டது.
ஆனால் இந்த உத்தரவுக்கு, சமீபத்தில் மதுரை உயர்நீதிமன்றக் கிளை இடைக்கால தடை விதித்தது. இதையடுத்து செல்வக்குமாரை முதல்வர் பதவியில் அமர்த்த பிஷப் தரப்பு முடிவு செய்தது.
ஆனால் கல்லூரியில் சின்னராஜ் தரப்பினர் கடும் அதிருப்தியுடன் இருந்ததால் பதட்டமான நிலை காணப்பட்டது. இதையடுத்து போலீஸ் பாதுகாப்பு கோரியது பிஷப்தரப்பு. போலீஸார் இரு தரப்பிலும் சமரசப் பேச்சு நடத்தினர். ஆனால் ஜெயக்குமார் முதல்வர் பதவி ஏற்கக் கூடாது என்று சின்னராஜ் தரப்பினர் பிடிவாதமாக கூறி விட்டனர்.
இந்தச் சூழ்நிலையில், நேற்று மாலை4 மணியளவில் ஜார்ஜ் செல்வக்குமார் முதல்வர் பதவியேற்புக்காக பிஷப் கிறிஸ்டோபர் ஆசிருடன் கல்லூரிக்கு வந்தார். அப்போது அவர்களது காரை உள்ளே விடாமல் நுழைவாயிலிலேயே 500க்கும் மேற்பட்ட மாணவ, மாணவியர் தடுத்து நிறுத்தி முற்றுகையிட்டனர். இதையடுத்து போலீஸ் பாதுகாப்புடன் பிஷப் மற்றும் அனைவரும் உள்ளே அழைத்துச் செல்லப்பட்டனர்.
ஆனால் முதல்வர் அறைக்குள் செல்வக்குமார் நுழையாமல் மாணவர்கள் தடுத்து முற்றுகையிட்டனர். இதனால் அங்கு பெரும் தள்ளுமுள்ளு ஏற்பட்டது. மாணவர்களில் சிலர் தாக்குதலில் இறங்கினர். பூத்தொட்டிகளை தூக்கிப் போட்டு உடைத்தனர். இதில் இருவருக்கு காயம் ஏற்பட்டது.
நிலைமை கலவரமாக மாறியதால், போலீஸார் தடியடி நடத்தினர். இதனால் மாணவர்கள் தரப்பில் 5 பேர் படுகாயமடைந்தனர். போலீஸ் தடியடியால் ஆத்திரமடைந்த மாணவர்கள், முதல்வர் அறை முன்பு சூழ்ந்து நின்று போலீஸாரையும், பிஷப்பையும் கண்டித்து கோஷமிட்டனர்.
பெரும் அமளிக்கு மத்தியில் போலீஸ் பாதுகாப்புடன் செல்வக்குமார் முதல்வர் அறைக்குள் சென்று முதல்வராகப் பொறுப்பேற்றுக் கொண்டார். ஆனால் மாணவர்கள் மத்தியில் பெரும் கொந்தளிப்பு நிலவியதால், கல்லூரிக்கு காலவரையினறி விடுமுறை விடப்பட்டது.
ஆனால் இதற்கு மாணவ, மாணவியர் கடும் எதிர்ப்பு ெதரிவித்தனர். கல்லூரிக்கு விடுமுறை விடக் கூடாது என்று கோரி பிஷப்பை சூழ்ந்து கொண்டு கோஷமிட்டனர். அவரை வெளியேற விடாமல் தடுத்தனர். இதையடுத்து காவல்துறை ஆணையர் நந்தகோபால் விரைந்து வந்தார்.
பிஷப் உள்பட அனைவரும் உடனடியாக கல்லூரியை விட்டு வெளியேற வேண்டும் என்றுஉத்தரவிட்டார். ஆனால் தான் அமைதி நிலவ பிரார்த்தனை செய்யப் போவதாக பிஷப் கூறினார். ஆனால் அதை ஆணையர் நிராகரித்து விட்டார். கல்லூரியில் அமைதி திரும்ப வேண்டுமானால் முதலில் அனைவரும் வெளியேற வேண்டும் என அவர் கண்டிப்புடன் கூறவே பிஷப் உள்ளிட்டோர் வெளியேறினர்.
சாலமன் பாப்பையா மீது புகார்:
முன்னதாக முதல்வர் அறையில் பிஷப் ஆசிர் செய்தியாளர்களிடம் பேசுகையில், சின்னராஜ் ஜோசப் இந்தக் கல்லூரியை தனியாருக்கு விற்க முயற்சித்தார். அதை நாங்கள் தடுத்து விட்டோம்.
இதனால் ஆத்திரமடைந்த அவரும், சாலமன் பாப்பையாவும் சேர்ந்து வன்முறையை தூண்டி விட்டுள்ளனர். அவர்கள் மீது போலீஸார் நடவடிக்கை எடுக்க வேண்டும்.
இந்தக் கல்லூரியை சுய நிதிக் கல்லூரி போல மாற்ற முயற்சி நடந்தது. ஆனால் அதை நாங்கள் முறியடித்துள்ளோம் என்றார் அவர்.
மதுரையின் புகழ் பெற்ற அமெரிக்கன் கல்லூரியில் நேற்று நடந்த இந்த சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.












Click it and Unblock the Notifications