பாதுகாப்பு கருதி பாக். பிரதமர் வீட்டில் குடியேறினார் சர்தாரி
இஸ்லாமாபாத்: பாகிஸ்தான் அதிபர் பதவிக்குப் போட்டியிடும் ஆசிப் அலி சர்தாரி, பாதுகாப்பு காரணத்திற்காக, பிரதமர் சையத் ரஸா கிலானி வீட்டில் குடியேறியுள்ளார். தேர்தல் முடியும் வரை அங்குதான் அவர் தங்கியிருப்பார் எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது.
பாகிஸ்தான் அதிபர் தேர்தல் செப்டம்பர் 6ம் தேதி நடைபெறுகிறது. இதில் சர்தாரி போட்டியிடுகிறார். இதேபோல நவாஸ் ஷெரீப் கட்சி சார்பிலும், முஷாரப் ஆதரவு முஸ்லீம் லீக் கட்சி சார்பிலும் வேட்பாளர்கள் நிறுத்தப்பட்டுள்ளனர்.
இந்த நிலையில் பாதுகாப்பு காரணங்களையொட்டி ஆசிப் அலி சர்தாரி, பிரதமர் கிலானி வீட்டுக்கு இடம் பெயர்ந்துள்ளார். தேர்தல் முடியும் வரை அவர் அங்குதான் தங்கியிருப்பார்.
பிரதமர் கிலானி பலத்த பாதுகாப்பு வளையத்தின் கீழ் இருப்பவர் என்பதால் அவரது வீட்டுக்கு சர்தாரி இடம் பெயர்ந்துள்ளார்.
சமீபத்தில் பாகிஸ்தான் அரசு தலிபான்களுக்கு தடை விதித்தது. இதனால் அவர்கள் அதிபர் தேர்தலில் போட்டியிடும் சர்தாரியைத் தாக்கக் கூடும் என்று அஞ்சப்படுவதால் இந்த நடவடிக்கை என்று தெரிகிறது.
தனது நண்பர்களின் ஆலோசனையின்படி, சர்தாரி பிரதமர் வீட்டில் தங்கியிருப்பதாக கூறப்படுகிறது. இதை பிரதமர் கிலானியும் உறுதி செய்துள்ளார்.