சீனாவில் பயங்கர நிலநடுக்கம் - 22 பேர் பலி
பெய்ஜிங்: சீனாவின் தென்மேற்கு பகுதியில் நேற்று மாலை ஏற்பட்ட பயங்கர நிலநடுக்கத்தில் 22 பேர் பரிதாபமாக உயிரிழந்தனர். வட மேற்கிலும் நிலநடுக்கம் ஏற்பட்டது. இதில் ஆயிரத்துக்கும் மேற்பட்ட வீடுகள் இடிந்து நாசமாயின.
சீனாவில் தென்மேற்கு பகுதியில் உள்ள சிச்சுவான் மற்றும் யுனான் மாகாணங்களில் நேற்று மாலை 4.30 மணிக்கு நிலநடுக்கம் ஏற்பட்டது. இது ரிக்டர் அளவுகோலில் 6.1 என்ற அளவில் பதிவானதாக சீன அரசின் செய்தி நிறுவனம் தெரிவித்துள்ளது.
இதில் 22 பேர் பலியாயினர். 126க்கும் மேற்பட்டோர் படுகாயமடைந்தனர். அவர்களுக்கு மருத்துவமனையில் சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது. இதில் ஆயிரத்துக்கும் மேற்பட்ட வீடுகள் இடிந்து நாசமாகியுள்ளன. வீடுகளை இழந்த நிலையில் பலர் சாலையில் தஞ்சம் புகுந்தனர். பல வீடுகள் விரிசல் ஏற்பட்டு இடியும் நிலையில் உள்ளன.
நிலநடுக்கத்தை தொடர்ந்து சிச்சுவான் மாகாணத்தில் தொலை தொடர்பு, மின்சாரம் ஆகியவை துண்டிக்கப்பட்டன. அதனால் முழுமையான சேத விவரங்கள் தெரியவில்லை என்றும் அதிகாரிகள் கூறியுள்ளனர். மீட்பு பணிகள் துரிதப்படுத்தப்பட்டுள்ளது. வீதியில் வாடும் மக்களுக்கு தற்காலிக டென்டுகள், போர்வைகளை அரசு வழங்கியுள்ளது.
அதேபோல வட மேற்கு சீனாவில் உள்ள ஜின்ஜியாங் மாகாணத்திலும் 5.3 ரிக்டர் அளவிலான நிலநடுக்கம் ஏற்பட்டது. இங்கு ஏற்பட்ட உயிரிழப்பு உள்ளிட்ட பாதிப்புகள் குறித்து தெரியவில்லை.
சிச்சுவான் மாகாணத்தில் கடந்த மே மாதம் தாக்கிய கடும் பூகம்பத்தில் சிக்கி 70,000 பேர் உயிரிழந்தது குறிப்பிடத்தக்கது.












Click it and Unblock the Notifications