அதிமுகவில் சேர்க்குமாறு கருணாநிதி கெஞ்சும் காலம் வரும்: ஜெ.

முன்னாள் அதிமுக அமைச்சர் செல்வகணபதி சமீபத்தில் அதிமுகவிலிருந்து நீக்கப்பட்டார். இதையடுத்து முதல்வர் கருணாநிதியை சந்தித்த அவர் திமுகவில் இணைந்தார்.
ஊழலில் அடிபட்ட செல்வகணபதியை திமுகவில் சேர்த்திருக்கிறீ்ர்களே முதல்வர் கருணாநிதியிடம் கேட்டபோது, ஜெயலலிதா மீது கூடத்தான் ஊழல் வழக்குகள் உள்ளன. அவரும் கூட திமுகவில் சேரலாம் என்றார்.
அதற்குப் பதிலடியாக இன்று ஒரு அறிக்கை வெளியிட்டுள்ளார் ஜெயலலிதா. அதன் விவரம்:
கடந்த மாதம் 30ந் தேதி அளித்த பேட்டியில், பாபர் மசூதியை இடிக்க கரசேவைக்கு அதிமுக ஆட்களை அனுப்பி வைத்தது என்று ஓர் அபாண்டமான பொய்யை கருணாநிதி கட்டவிழ்த்து விட்டுள்ளார்.
இவ்வாறு திரும்பத் திரும்ப கருணாநிதி கூறுவது வன்மையாக கண்டிக்கத்தக்கது.
அதிமுக ஒருபோதும் கரசேவைக்கு ஆட்களை அனுப்பியதில்லை என்பதை மீண்டும் திட்டவட்டமாக தெரிவித்துக்கொள்கிறேன்.
இஸ்லாமியர்களை தீவிரவாதிகள் என்று சொன்ன கருணாநிதி மதச்சார்பின்மை பற்றி பேசும் தகுதியை இழந்துவிட்டார்.
"ஜெயலலிதா மீது கூடதான் வழக்கு இருக்கிறது. அவர் வந்தாலும் கட்சியில் சேர்த்துக்கொள்வோம்' என்று அதிகார போதையில் மற்றொரு கேள்வி ஒன்றுக்கு கருணாநிதி பதிலளித்துள்ளார்.
கருணாநிதியும், அவரது குடும்பத்தினரும் தங்களை அதிமுகவில் சேர்த்துக்கொள்ளுங்கள் என்று என்னிடம் வந்து கேட்கின்ற காலம் விரைவில் வருமே தவிர, நான் அங்கு போய்ச் சேரக்கூடிய காலம் நிச்சயமாக வரவே வராது.
5 லட்சம் பெற்ற மு.க.முத்து:
கருணாநிதியின் மூத்த மகன் மு.க.முத்து, அதிமுக தலைமை கழகத்துக்கு வந்து என்னிடம் இருந்து 5 லட்சம் ரூபாய் உதவி பெற்றதையெல்லாம் கருணாநிதி மறந்துவிட்டார் போலும்.
என் மீது இருக்கும் வழக்குகள் கருணாநிதியால் புனையப்பட்ட பொய் வழக்குகள் ஆகும். அதில் 12க்கும் மேற்பட்ட வழக்குகளில் நான் விடுதலை பெற்றுள்ளேன்.
வழக்குகளை நேர்மையாக எதிர் கொண்டு ஒவ்வொன்றாக வென்று வருகிறேன். அந்த வழக்குகளை இன்றும் நீதிமன்றத்தில் சந்தித்து துணிச்சலுடன் போராடிக் கொண்டிருக்கிறேன். எனவே என்னைப் பற்றியோ, என் மீது உள்ள வழக்குகளைப் பற்றியோ பேசுவதை கருணாநிதி நிறுத்திக்கொள்வது நல்லது.
திமுக ஆட்சி விரைவில் கவிழும்:
திமுக ஆட்சி விரைவில் கவிழப் போகிறது. அதற்கான நாட்கள் எண்ணப்படுகின்றன.
அப்போது கருணாநிதி, அவருடைய குடும்ப உறுப்பினர்கள், அவரை துதிபாடுபவர்கள் எல்லாம் தங்களை அதிமுகவில் இணைத்துக் கொள்ளுங்கள் என்று என்னிடம் வந்து கேட்கப்போகும் நாள் வெகு தூரத்தில் இல்லை என்று கூறியுள்ளார் ஜெயலலிதா.












Click it and Unblock the Notifications