மின் திருட்டு அபராதம்-நீதிமன்றம் உத்தரவு
மதுரை: மின் திருட்டு வழக்கில் தனக்கு விதிக்கப்பட்ட அபராதத்தை குறைக்கக் கோரிய டாக்டரின் மனுவை மதுரை உயர் நீதிமன்ற கிளை தள்ளுபடி செய்தது.
அரியலூர் மாவட்டம், ஜெயங்கொண்டத்தை சேர்ந்தவர் டாக்டர் செந்தில்குமார். மருத்துவமனை நடத்தி வருகிறார். கடந்த 24.07.2006 அன்று செந்தில்குமாரின் மருத்துவமனையில் மின் வாரிய உதவி செயற்பொறியாளர் உள்பட அதிகாரிகள் ஆய்வு செய்தனர். அப்போது மின்சாரம் திருடப்பட்டது கண்டுபிடிக்கப்பட்டது. இதையடுத்து அவருக்கு மூன்று லட்சத்து 98,660 அபராதமாக விதிக்கப்பட்டது.
அபராதத் தொகையை குறைக்க கோரி, டாக்டர் செந்தில்குமார் மின் வாரிய அதிகாரிகளிடம் மனு செய்தார். அதற்கு அபராதத் தொகையில் 40 சதவீதத்தை கட்டிய பிறகு மேல் முறையீடு செய்யலாம் என அதிகாரிகள் தெரிவித்தனர். இதையடுத்து ரூ.86,162 தொகைக்கு வங்கி உத்தரவாதம் அளித்தார்.
ஆனால் அந்த தொகையை அபராதமாக கணக்கிட்டு கழித்துக் கொண்டதாக அதிகாரிகள் கூறினர். இதை ரத்து செய்ய வேண்டும் என்று டாக்டர் செந்தில்குமார் மதுரை உயர் நீதிமன்ற கிளையில் மனு தாக்கல் செய்தார்.
இந்த மனு நீதிபதி சந்துரு முன்னிலையில் விசாரணைக்கு வந்தது. நீதிபதி தனது தீர்ப்பில், மனுதாரார் 24 மணி நேரம் இயங்கும் மருத்துவமனை நடத்துகிறார். அங்கு ஸ்கேன், அறுவை சிகிச்சை அரங்கு உள்ளிட்ட பல வசதிகள் இருக்கின்றன. அந்தப் பகுதியில் துணை மின் நிலையம் இருப்பதால் மின் தடை ஏற்பட வாய்ப்பு இல்லை என்று அதிகாரிகள் கூறியுள்ளனர்.
மேலும் மனுதாரர் மீட்டரை இயங்க விடாமல், நேரடியாக மின்சாரம் பெற்றுள்ளார். இந்த தொகையை ஒப்புக் கொண்டு அபராத தொகையை கட்டியுள்ளார். அதனால் இந்த விஷயத்தில் வாதாடுவற்கு ஒன்றுமில்லை. எனவே அவரது மனு தள்ளுபடி செய்யப்படுகிறது என்று கூறினார்.












Click it and Unblock the Notifications