விஜய்காந்துக்கு முரசு சின்னம் கிடைக்குமா?
சென்னை: கட்சிகளுக்கு மத்திய தேர்தல் ஆணையம்தான் தேர்தல் சின்னம் ஒதுக்கீடு செய்கிறது. இதில் மாநில தேர்தல் ஆணையத்திற்கு எந்த அதிகாரமும் இல்லை என விஜய்காந்த் கட்சிக்கு முரசு சின்னம் கிடைக்குமா என்ற கேள்விக்கு தமிழக தலைமை தேர்தல் அதிகாரி நரேஷ் குப்தா பதிலளித்தார்.
நிருபர்களிடம் அவர் கூறியதாவது:
தொகுதி மறுசீரமைப்புப் பணிகள் முடிந்து புதிய வாக்காளர் சேர்ப்புப் பணிகள் தொடங்கியுள்ளன. முன் எப்போதும் இல்லாத அளவுக்கு 35 லட்சம் பேர் மனு செய்துள்ளனர்.
அந்தந்த தொகுதி மையங்கள் மற்றும் வாக்குச் சாவடி அலுவலகங்கள் ஆய்வு செய்தவை, கல்லூரி மற்றும் நிறுவனங்கள் மூலம் பெறப்பட்டவை, எலக்ட்ரானிக் பதிவுகள் மூலம் கிடைத்தவை, பல்வேறு அரசியல் கட்சிகள் வாயிலாக சேர்க்கப்பட்டவை என்ற வகையில் வாக்காளர் எண்ணிக்கை அதிகரித்துள்ளது.
இதனை பரிசீலித்து இறுதி வாக்காளர் பட்டியல் இம்மாதம் 3வது வாரத்தில் வெளியிட நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது.
2008ம் ஆண்டு மக்கள் தொகை கணக்கெடுப்பின்படி தமிழகத்தில் 6.6 கோடி மக்கள் உள்ளனர். இதில் சுமார் 65% பேர் வாக்காளர் பட்டியலில் இடம் பெற்றுள்ளனர் என்றார்.
தேமுதிகவுக்கு முரசு சின்னம் ஒதுக்குவதில் பிரச்சனை இருக்கிறதா என்று நிருபர்கள் கேட்டதற்கு, மத்திய தேர்தல் ஆணையம்தான் அங்கீகரிக்கப்பட்ட விதிகளுக்கு உட்பட்ட கட்சிகளுக்கு தேர்தல் சின்னம் ஒதுக்கீடு செய்கிறது.
குறிப்பிட்ட அளவு வாக்குகள் பெற்றிருக்க வேண்டும், 2 சட்டமன்ற உறுப்பினர்களை கொண்டிருக்க வேண்டும் என்பது உள்ளிட்ட விதிகள் பொருந்துமானால் தேர்தல் சின்னம் வழங்கப்படும்.
இதில் மாநில தேர்தல் ஆணையத்திற்கு எந்த அதிகாரமும் கிடையாது என்றார் நரேஷ் குப்தா.












Click it and Unblock the Notifications