ரிசர்வ் வங்கி-புதிய கவர்னராக சுப்பாராவ் நியமனம்
டெல்லி: இந்திய ரிசர்வ் வங்கியின் புதிய ஆளுநராக டி.சுப்பாராவ் நியமிக்கப்பட்டுள்ளார். வரும் 5ம் தேதி அவர் பதவியேற்கிறார்.
தற்போது ரிசர்வ் வங்கி ஆளுநராக பொறுப்பு வகிக்கும் ஒய்.வி.ரெட்டியின் பதவிக்காலம் வரும் 5ம் தேதியுடன் முடிவடைகிறது. தனக்கு பதவி நீட்டிப்பு வேண்டாம் என்று அவர் கேட்டுக் கொண்டதை அடுத்து இப்பதவிக்கு உரியவரை தேர்வு செய்யும் பணி கடந்த சில மாதங்களாக நடந்து வந்தது.
திட்டக்குழு துணைத் தலைவர் மான்சிங் அலுவாலியா, தற்போது ரிசர்வ் வங்கியின் துணை தலைவராக உள்ள ராகேஷ் மோகன் ஆகியோர் பரிசீலிக்கப்பட்டனர்.
இதுதொடர்பாக கடந்த வாரம் நடந்த கூட்டத்தில் நிதித்துறை செயலாளராக உள்ள டாக்டர் சுப்பாராவின் பெயர் முன்வைக்கப்பட்டதாக தெரிகிறது. இதையடுத்து சுப்பாராவை ரிசர்வ் வங்கியின் ஆளுநராக நியமித்து நிதித்துறை அமைச்சர் ப.சிதம்பரம் அறிவித்துள்ளார்.
வரும் 5ம் தேதி சுப்பாராவ் ரிசர்வ் வங்கி ஆளுநராக பதவியேற்க உள்ளார். கான்பூர் ஐஐடியில் பொறியியல் பட்டம் பெற்ற சுப்பாராவ், 1972ம் ஆண்டு ஐஏஎஸ் தேர்வில் முதலிடத்தில் தேர்ச்சி பெற்றார்.
கடந்த 2007ம் ஆண்டு நிதித்துறை செயலாளராக நியமிக்கப்பட்டார். அதற்கு முன் பொருளாதார விவகாரங்களுக்கான செயலராக பணியாற்றினார்.
அமெரிக்காவின் ஓஹியோ பல்கலைக்கழகத்தில் பொருளாதாரத்தில் முதுகலை பட்டம் பெற்றவர். எம்ஐடியில் ஹம்ப்ரி விருதை பெற்றுள்ளார். ஆந்திர பல்கலையில் பொருளாதாரத்துக்கான டாக்டர் பட்டமும் சுப்பாராவ் பெற்றுள்ளார்.
ரிசர்வ் வங்கி ஆளுநராக நியமிக்கப்பட்டதற்கு சுப்பாராவுக்கு ஆந்திர முதல்வர் ராஜசேகர ரெட்டி பாராட்டு தெரிவித்துள்ளார்.
கடந்த பல ஆண்டுகளாக தொடர்ந்து ஆந்திரத்தைச் சேர்ந்தவர்களே இந்தப் பதவிக்கு நியமிக்கப்பட்டு வருவது குறிப்பிடத்தக்கது.












Click it and Unblock the Notifications