ஆர்.சி.வி. மிரட்டல்: நடவடிக்கை எடுக்க முதல்வருக்கு சிபிஎம் கோரிக்கை
சென்னை: மதுரையில் உள்ள கேபிள் டி.வி. ஆபரேட்டர்கள் மீது பொய் வழக்கு தொடுப்பது குறித்தும், மிரட்டப்படுவது குறித்தும், ராயல் கேபிள் விஷன் இணைப்பைத் தான் பெற்று விநியோகிக்க வேண்டும் என்ற நிர்ப்பந்தம் தொடர்பாகவும் உரிய நடவடிக்கை எடுக்கக்கோரி முதல்வர் கருணாநிதிக்கு மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் மாநிலச் செயலாளர் என்.வரதராஜன் கடிதம் எழுதியுள்ளார்.
இதுகுறித்து அவர் எழுதியுள்ள கடிதத்தில் கூறியிருப்பதாவது:
மதுரையில் உள்ள கேபிள் டி.வி. ஆப்ரேட்டர்கள் கடந்த பல ஆண்டுகளாக சுமங்கலி கேபிள் விஷன் என்ற நிறுவனத்திடம் ஒளிபரப்பை பெற்று கேபிள் டி.வி. தொழில் செய்து வருகிறார்கள்.
சமீபத்தில் துவங்கப்பட்டுள்ள ராயல் கேபிள் விஷன் என்ற நிறுவனம், அனைத்து கேபிள் டி.வி. ஆபரேட்டர்களையும் அழைத்து ஒரு கூட்டம் போட்டு, தங்களுடைய நிறுவனத்தில் இருந்துதான் ஒளிபரப்பை பெற்று மக்களுக்கு ஒளிபரப்பு செய்ய வேண்டும் என்று வற்புறுத்தியதாகவும், மக்கள் விரும்பும் பிரபல சானல்கள் ஒளிபரப்பை ராயல் கேபிள் விஷன் நிறுவனம் வழங்கவில்லை என்கிற காரணத்தால் கேபிள் டி.வி. ஆபரேட்டர்கள் ராயல் கேபிள் டி.வி. நிறுவனத்திடம் ஒளிபரப்பை பெற மறுத்து விட்டதாகவும் தெரிகிறது.
இதன் காரணமாக மதுரை பெத்தானியாபுரத்தில் கேபிள் டி.வி. நடத்தும் அமல்ராஜ் என்பவர் மீது, தன்னுடைய கேபிள் டி.வி. மூலம் புதுப்படம் ஒளிபரப்பினார் என்றும், மதுரை ஜெய்ஹிந்த்புரத்தில் கேபிள் டி.வி. நடத்தி வரும் செல்வம் என்ற கேபிள் டி.வி. ஆபரேட்டர் மீது ராயல் கேபிள் விஷன் நிறுவனத்தின் ஒயரை அறுத்தார் என்றும், பொய் வழக்கு போடப் பட்டுள்ளதோடு, ராயல் கேபிள் விஷன் நிறுவனத்திடம் தாங்கள் சேனல்களை பெற மறுப்பதால், பல கேபிள் டி.வி. ஆபரேட்டர்கள் மிரட்டப்படுவதாகவும், காவல்துறையினரால் கைது செய்யப்படுவதாகவும், மதுரையில் உள்ள கேபிள் டி.வி. ஆப் ரேட்டர்கள் நேரிலும், கடிதங்கள் மூலமும் தெரிவிக்கின்றனர்.
கேபிள் டி.வி. ஆபரேட்டர்கள் தாங்கள் விரும்பும் நிறுவனத்திடம் தொழில் ரீதியாக சானலைப் பெற்று மக்களுக்கு ஒளிபரப்புவது அவர்களது உரிமை. இதில், இன்னொரு நிறுவனம் தலையிட்டு தன்னுடைய நிறுவனத்தின் சானலைத்தான் ஒளிபரப்ப வேண்டும் என்று வலியுறுத்துவது முறையாக இருக்காது என்பதை தெரிவித்துக் கொள்கிறோம்.
இப்பிரச்சனையில் காவல்துறை ஒரு சார்பாக செயல்படுகிற நிலைபாட்டையும் தாங்கள் கவனித்து நிவர்த்தி செய்திட வேண்டுகிறோம்.
எனவே தமிழக முதல்வர், இப்பிரச்சனையில் தலையிட்டு, கேபிள் டி.வி. உரிமையாளர்கள் தாங்கள் விரும்பும் நிறுவனத்திடம் சானலை பெற்று, தொழில் செய்வதற்கு உரிய வாய்ப்பையும் பாதுகாப்பையும் வழங்க வேண்டுமென கேட்டுக் கொள்கிறோம்.
மேலும் ஏற்கெனவே தமிழக அரசு அறிவித்துள்ளது போல் உடனடியாக கேபிள் டி.வி. நிறுவனத்தை அரசே துவக்கி நடத்த நடவடிக்கை எடுத்திட வேண்டும் எனவும் கேட்டுக் கொள்கிறோம் என்று அவர் கூறியுள்ளார்.












Click it and Unblock the Notifications