அதிமுக பொதுச் செயலர் தேர்தல்-மனு தாக்கல் தொடக்கம்
சென்னை: அதிமுக பொதுச் செயலாளர் பதவி தேர்தலுக்கான வேட்பு மனு தாக்கல் இன்று காலை தொடங்கியது.
அதிமுக சட்ட விதிப்படி ஐந்து ஆண்டுகளுக்கு ஒருமுறை பொதுச் செயலாளர் பதவிக்கு தேர்தல் நடத்தப்பட வேண்டும். அந்த வகையில் வருகிற 10ம் தேதியுடன் ஜெயலலிதாவின் பதவி முடிவுக்கு வருகிறது. இதையடுத்து தேர்தல் அறிவிக்கப்பட்டுள்ளது.
இன்று தொடங்கி 7ம் தேதி வரை வேட்பு மனு தாக்கல்செய்யலாம் என அறிவிக்கப்பட்டுள்ளது. போட்டி இருந்தால் 10ம் தேதியன்று தேர்தல் நடத்தப்பட்டு அன்றே முடிவு அறிவிக்கப்படும். தேர்தல் ஆணையராக அமைப்புச் செயலாளர் விசாலாட்சி நெடுஞ்செழியன் செயல்படவுள்ளார்.
தேர்தலுக்கான வேட்பு மனு தாக்கல் இன்று காலை தொடங்கியது. இத்தேர்தலில் ஜெயலலிதா மட்டுமே போட்டியிடுவார் என்பதால் அவரே போட்டியின்றி மீண்டும் பொதுச் செயலாளராக தேர்வு செய்யப்படவுள்ளார்.
எம்.ஜி.ஆர்.மறைவுக்குப் பின்னர் 1988ம் ஆண்டு அதிமுக உடைந்தது. இதையடுத்து தனது தலைமையில் இயங்கிய அதிமுகவின் பொதுச் செயலாளராக தேர்ந்தெடுக்கப்பட்டார் ஜெயலலிதா. பின்னர் இரு அதிமுகவும் ஒன்றாகி விட்டன. 88ம் ஆண்டு முதல் தொடர்ந்து அதிமுகவின் பொதுச் செயலாளராக இருந்து வருகிறார் ஜெயலலிதா.
ஜெயலலிதா அதிமுக பொதுச் செயலாளராக பொறுப்பேற்ற பின்னர் 1989, 1993, 2003 ஆகிய ஆண்டுகளில் தேர்தல் நடந்து அவர் அப்பொறுப்புக்கு தேர்ந்தெடுக்கப்பட்டார். தற்போது நான்காவது முறையாக அவர் பொதுச் செயலாளராக தேர்ந்தெடுக்கப்படவுள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது.












Click it and Unblock the Notifications