ரேஷன்: திமுகவினர் கோடிக்கணக்கில் முறைகேடு-ஜெ

இதுகுறித்து அவர் வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறியிருப்பதாவது:
அரிசிக் கடத்தல் தமிழகம் முழுவதும் அமோகமாக நடைபெற்று வருகிறது. கரூர் மாவட்டம் நுகர்வோர் கூட்டுறவு மொத்த விற்பனை பண்டக சாலையின் கீழ் 40 நியாய விலைக் கடைகள் இயங்கி வருகின்றன. இதில் தொழிலாளர் முன்னேற்ற சங்கத்தின் கெளரவத் தலைவராக கரூர் மாவட்ட திமுக செயலாளர் வாசுகி முருகேசன் உள்ளார்.
பண்டக சாலைக்கு உட்பட்ட 4 மற்றும் 5 எண் உள்ள நியாய விலைக் கடைகள் அரவக்குறிச்சியில் செயல்பட்டு வருகின்றன. அரவக்குறிச்சி நியாய விலைக் கடைகளில் விற்பனையாளர்களாக திமுகவின் தொழிலாளர் முன்னேற்ற சங்கத்தைச் சேர்ந்த சி.தண்டபாணி, கே.செந்திலரசன் ஆகியோர் 9.5.2008 வரை பல்வேறு காலக் கட்டங்களில் பணியாற்றி வந்துள்ளனர்.
கரூர் மாவட்ட நுகர்வோர் கூட்டுறவு மொத்த விற்பனை பண்டகச் சாலையின் தொழிலாளர் முன்னேற்ற சங்கச் செயலாளர் பதவியை 31.5.2008 வரை சி.தண்டபாணி என்பவர் வகித்து வந்தார். தற்போது அந்தப் பதவியில் 1.6.2008 முதல் கே.செந்திலரசன் இருந்து வருகிறார்.
தொழிலாளர் முன்னேற்ற சங்கத்தைச் சேர்ந்த தண்டபாணி மற்றும் செந்திலரசன் ஆகியோர் அரவக்குறிச்சி நியாய விலைக் கடைகள் 4 மற்றும் 5ல் பணியாற்றிய காலக் கட்டங்களில், போலியாக அ' பதிவேடு என்ற பதிவேட்டினை இரு கடைகளிலும் உருவாக்கி, குடும்ப அட்டைகளே இல்லாமல் போலி குடும்ப அட்டை குறியீட்டு எண்ணை மட்டும் தயார் செய்துள்ளனர்.
அதன் மூலம் கடை எண். 4ல் 578 போலி குடும்ப அட்டைகளும், கடை எண்.5ல் 741 போலி குடும்ப அட்டைகளும், மொத்தம் 1,319 குடும்ப அட்டைகளின் பெயரில், சட்டத்திற்குப் புறம்பாக பொது விநியோகத் திட்டத்தின் கீழ் 3,79,719 கிலோ அரிசியையும், 30,943 கிலோ சர்க்கரையையும் 1,15,865 லிட்டர் மண்ணெண்ணெய்யையும் பெற்றுள்ளனர். அதை வெளிச்சந்தையில் விற்று, ரூ.52.79 லட்சம் சம்பாதித்துள்ளதாகத் தெரிய வருகிறது.
திமுகவினரால் நடத்தப்பட்ட முறைகேட்டினை கரூர் மாவட்ட பொது விநியோகத் திட்டத்தின் துணைப் பதிவாளர் கண்டறிந்து, சம்மந்தப் பட்டவர்கள் மீது நடவடிக்கை எடுக்க உத்தரவிட்டார். இதையடுத்து, திமுக மாவட்டச் செயலாளரின் மிரட்டலையும் மீறி, கரூர் மாவட்டப் பதிவாளர், ஈரோடு குடிமைப் பொருள் வழங்கல் குற்றப் புலானாய்வுத் துறைக்கு 23.7.2008 அன்று புகார் அனுப்பியுள்ளார்.
இதையடுத்து தண்டபாணி மற்றும் செந்திலரசன் ஆகியோர் ரூ. 1.05 கோடி முறைகேடு செய்ததாக வழக்கு பதிவு செய்யப்பட்டு, இருவரும் கைது செய்யப்பட்டுள்ளனர். இவர்கள் இருவரும் ஜாமீனில் வெளிவர முயற்சித்து வருவதாக தெரிகிறது. இது போன்ற கயவர்கள் வெளியில் வர திமுக அரசு ஆதரவு அளித்தால் அது அரிசிக் கடத்தலை மேலும் ஊக்குவிக்க வழி வகுக்கும்.
நியாய விலைக் கடைகளில் முறைகேடுகள் செய்து, ரேஷன் பொருட்களை வெளிச் சந்தைக்கு விற்று பல லட்சக்கணக்கான ரூபாய்களை சுருட்டிய கரூர் மாவட்ட தொழிலாளர் முன்னேற்ற சங்க நிர்வாகிகள் சி.தண்டபாணி, கே.செந்திலரசு, அதற்கு உடந்தையாக இருந்த கரூர் மாவட்ட திமுக செயலாளர் வாசுகி முருகேசன், மாவட்டப் பதிவாளரை மாற்றம் செய்த அமைச்சர் ஆகியோர் மீதும் சட்டப்படி கடுமையான நடவடிக்கை எடுக்கப்பட வேண்டும்.
அவர்களிடம் இருந்து ரூ.1.05 கோடியை இந்த நபர்களிடமிருந்து வசூல் செய்ய தக்க நடவடிக்கை எடுக்க வேண்டும் என்றுகேட்டுக் கொள்கிறேன் என்று கூறியுள்ளார்.












Click it and Unblock the Notifications