அரசு பள்ளிகளில் 99 மாணவர்களுக்கு 2 ஆசிரியர்கள்
ராமேஸ்வரம்: தமிழகத்தில் அரசு பள்ளிகளில் 99 மாணவர்களுக்கு 2 ஆசிரியர் என்ற நிலை உள்ளது. இந்த நிலை மாறவில்லை எனில் கல்வி முறையில் மிகப் பெரிய சீரழிவை சந்திக்க நேரிடும் என்று தமிழ்நாடு ஆரம்ப பள்ளி ஆசிரியர் கூட்டணி பொதுச் செயலாளர் பர்வதராஜ் கூறியுள்ளார்.
இது குறித்து அவர் செய்தியாளர்களிடம் கூறியதாவது,
அரசு பள்ளிகளில் அறிமுகம் செய்யப்பட்டுள்ள செயல் வழி கற்றல் முறை நடைமுறைக்கு ஏற்றது அல்ல. அதனால் மாணவர்கள் கல்வித் தரம் பாதிக்கும். காமராஜர் ஆட்சிக் காலத்தில் 96 மாணவர்களுக்கு 5 ஆசிரியர்கள் இருந்த நிலை மாறி தற்போது 99 மாணவர்களுக்கு 2 ஆசிரியர் என்ற நிலை உள்ளது.
இதிலும் அலுவலக பணி, பயிற்சி என கணக்கிட்டால் ஒரு ஆசிரியர் மட்டுமே பணிபுரியும் நிலை உள்ளது. தமிழகத்தில் உள்ள 35,000 ஆரம்ப பள்ளிகளில் 60 சதவீத பள்ளிகளில் 2 ஆசிரியர்கள் மட்டுமே பணியில் உள்ளனர்.
இந்த நிலை மாறவில்லை என்றால் கல்வி முறையில் மிகப் பெரிய சீரழிவை சந்திக்க நேரிடும். பொது மாறுதல் முகாம்களில் அரசியல் தலையீடு அதிகமாகியுள்ளது. இது கேலிக்குரியதாக உள்ளது.
தமிழகத்தில் தனியார் ஆசிரியர் பள்ளிகள் புற்றீசல்கள் போல் முளைத்துள்ளன. அரசு மற்றும் அரசு உதவி பெறும் ஆசிரியர் பயிற்சி நிறுவங்களை தவிர மற்ற தனியார் பயிற்சி மையங்களை உடனே அரசு மூட வேண்டும் என்றார்.












Click it and Unblock the Notifications