டாடாவுக்கு யுகே-இந்தியா பிசினஸ் கவுன்சில் விருது
{image-ratan tata250_02092008.jpg tamil.oneindia.com}லண்டன்: இந்திய - பிரிட்டிஷ் வர்த்தக உறவின் மேம்பாட்டுக்கு உறுதுணையாக இருந்ததற்காக, டாடா குழுமத் தலைவர் ரத்தன் டாடாவுக்கு யு.கே.- இந்திய பிசினஸ் கவுன்சிலின் விருது வழங்கப்பட்டுள்ளது.
லண்டனில் நடந்த யு.கே. - இந்திய பிசினஸ் கவுன்சிலின் முதலாவது ஆண்டு விழாவில் இந்த விருது வழங்கப்பட்டது. இந்தியாவுக்கான இங்கிலாந்து துணைத் தூதர் சர் ரிச்சர்ட் ஸ்டாக்கிடமிருந்து டாடா சார்பில் அந்த நிறுவனத்தின் நிர்வாக இயக்குநர் அன்வர் ஹூசேன் விருதினைப் பெற்றுக் கொண்டார்.
நிகழ்ச்சியில் சர் ஸ்டாக் பேசுகையில், கோரஸ் நிறுவனம் மற்றும் ஜாகுவார் லேன்ட் ரோவர் நிறுவனங்களை வாங்கியது முதல் இதுவரை 50 ஆயிரம் இங்கிலாந்து நாட்டினருக்கு வேலை வாய்ப்பினை அளித்து இங்கிலாந்து பொருளாதாரத்திற்குப் பெரும் பங்காற்றியுள்ளார் ரத்தன் டாடா என்றார் ஸ்டாக்.
இந்த நிகழ்ச்சிக்கு லண்டன் மேயர் ஆல்டர்மேன் டேவிட் லூயிஸ் ஏற்பாடு செய்திருந்தார். நிகழ்ச்சியில், இந்துஜா குழுமத் தலைவர் ஜி.பி.இந்துஜா, கிங்பிஷர் உரிமையாளர் விஜய் மல்லையா உள்ளிட்டோர் கலந்து
கொண்டனர்.
நிகழ்ச்சியில், ஆல்டர்மேன் பேசுகையில், இந்தியாவில் பார்வையிழப்பைத் தடுக்க 3.5 மில்லியன் பவுன்டு நிதி திரட்டப் போவதாக தெரிவித்தார்.
ரத்தன் டாடா, லண்டன் பொருளாதாரப் பள்ளியில் ஏற்கனவே கெளரவ டாக்டர் பட்டமளிக்கப்பட்டு கெளரவிக்கப்பட்டவர் என்பது குறிப்பிடத்தக்கது. 2007ம் ஆண்டு பார்ச்சூன் பத்திரிக்கை உலகின் 25 சக்தி வாய்ந்த தொழிலதிபர்களில் ஒருவராகவும் ரத்தன் தேர்ந்தெடுக்கப்பட்டார்.
கடந்த மே மாதம் டைம்ஸ் இதழின் உலகின் 100 சக்தி வாய்ந்த மனிதர்களில் ஒருவராக ரத்தன் டாடா தேர்வு செய்யப்பட்டார்.
சிங்கப்பூர் அரசு ரத்தன் டாடாவுக்கு கெளரவ குடிமகன் என்ற சிறப்பையும் செய்துள்ளது.












Click it and Unblock the Notifications