தினமலர் ஆசிரியர், பதிப்பாளரை கைது செய்ய உயர்நீதிமன்றம் தடை
சென்னை: தினமலர் வேலூர் பதிப்பின் ஆசிரியர் ராகவன் மற்றும் பதிப்பாளர் சத்தியமூர்த்தி ஆகியோரைக் கைது செய்ய போலீஸாருக்கு சென்னை உயர்நீதிமன்றம் தடை விதித்துள்ளது.
வேலூர் பதிப்பு தினமலரின் இலவச இணைப்பில் நபிகள் நாயகம் குறித்த கார்ட்டூன் இடம் பெற்றிருந்தது. இது பெரும் சர்ச்சையை ஏற்படுத்தியது. இந்த கார்ட்டூனைக் கண்டித்து வேலூர் தினமலர் அலுவலகம் முன்பு இஸ்லாமிய அமைப்புகள் சார்பில் ஆர்ப்பாட்டம் நடத்தப்பட்டது.
இந் நிலையில், ஆசிரியர் ராகவன் மற்றும் பதிப்பாளர் சத்தியமூர்த்தி ஆகியோர் முன் ஜாமீன் கோரி சென்னை உயர்நீதிமன்றத்தில் மனு தாக்கல் செய்தனர்.
இந்த வழக்கு நீதிபதி ரகுபதி முன்பு விசாரணைக்கு வந்தது. செப்டம்பர் 5ம் தேதி வரை இருவரையும் கைது செய்ய போலீஸாருக்கு தடை விதித்து உத்தரவிட்டு வழக்கை அன்றைக்கு தள்ளி வைத்தார்.
முன்னதாக இஸ்லாமிய அமைப்பு ஒன்றின் சார்பில் வேலூர் போலீஸில், ராகவன், சத்தியமூர்த்தி மீது புகார் தரப்பட்டது.
இதை தங்களது மனுவில் சுட்டிக் காட்டிய ராகவனும், சத்தியமூர்த்தியும், இது இணையதளங்களிலிருந்து எடுக்கப்பட்ட கார்ட்டூன். குறிப்பிட்ட மதத்தினரின் உணர்வுகளையோ அல்லது நம்பிக்கைகளையோ புண்படுத்தும் நோக்கில் இது வெளியிடப்படவில்லை என்று தெரிவித்திருந்தனர்.












Click it and Unblock the Notifications