தமிழகத்தில் விநாயகர் சதுர்த்தி கோலாகலம்
மதுரை: விநாயகர் சதுர்த்தி தமிழகம் முழுவதும் இன்று வழக்கமான உற்சாகத்துடன் கொண்டாடப்பட்டது.
தமிழகத்தின் தென் மாவட்டங்களில் விநாயகர் சதுர்த்தி கொண்டாட்டங்கள் களை கட்டியிருந்தன.
மதுரை மீனாட்சி அம்மன் கோவிலில் உள்ள புகழ் பெற்ற முக்குருணி விநாயகர் கோவிலில் நூற்றுக்கணக்கான பக்தர்கள் வழிபட்டனர். சிறப்பு பூஜைகள், அபிஷேகங்கள், மகா கணபதி ஹோமம் ஆகியவை நடத்தப்பட்டன.
விநாயகரு வெள்ளி கவசம் போர்த்தப்பட்டிருந்தது. மிகப் பெரிய கொழுக்கட்டையும் விநாயகருக்கு படைக்கப்பட்டிருந்தது. இதன் எடை 20 கிலோவாகும். இந்த கொழுக்கட்டை பின்னர் பக்தர்களுக்கு பிரித்து வழங்கப்படும்.
இதேபோல பிள்ளையார்பட்டியில் உள்ள கற்பகவிநாயகர் கோவிலிலும் ஆயிரக்கணக்கான பக்தர்கள் குவிந்துள்ளனர். அங்கு விநாயகருக்கு சிறப்பு அபிஷேகங்கள், பூஜைகள் நடத்தப்பட்டன.
திருச்சி மலைக்கோட்டையில் உள்ள உச்சிப்பிள்ளையார்கோவிலிலும் இன்று விநாயகர் சதுர்த்தியை முன்னிட்டு சிறப்பு வழிபாடுகள் நடத்தப்பட்டன.
மலைக்கோட்டை அடிவாரத்தில் உள்ள மாணிக்க விநாயகர் கோவிலிலும் வழிபாடுகள் சிறப்பாக நடத்தப்பட்டன.
இரு கோவில்களிலும் 30 கிலோ எடை கொண்ட பிரமாண்ட கொழுக்கட்ைட பிள்ளையாருக்குப் படைக்கப்பட்டது.
புதுச்சேரியில் ..
புதுச்சேரியிலும் விநாயகர் சதுர்த்தி கொண்டாட்டங்கள் களை கட்டியிருந்தன.
புகழ் பெற்ற மணக்குள விநாயகர் கோவிலில் அதிகாலை 4 மணிக்கு தரிசனம் தொடங்கியது. விநாயகருக்கு தங்கக் கவசம் அணிவிக்கப்பட்டிருந்தது. 27 வகை பொருட்களுடன் சிறப்பு அபிஷேகமும் நடத்தப்பட்டது. இன்று மாலை விநாயகர் வீதி உலை நடைபெறுகிறது.
சாரம் என்ற இடத்தில் 21 அடியில் விநாயகர் சிலை வைக்கப்பட்டுள்ளது. அங்கு கணபதி ஹோமமும் நடத்தப்பட்டது.
தமிழகம் மற்றும் புதுச்சேரியில் ஆயிரக்கணக்கான விநாயகர் சிலைகள் ஆங்காங்கே வைக்கப்பட்டு வழிபாடுகள் நடத்தப்பட்டு வருகின்றன.
விநாயகர் சதுர்த்தியை முன்னிட்டு அனைத்து கோவில்கள், விநாயகர் சிலைகளுக்கு பலத்த போலீஸ் பாதுகாப்பு அளிக்கப்பட்டுள்ளது.












Click it and Unblock the Notifications