நாளை கூடுகிறது என்.எஸ்.ஜி-இந்தியாவுக்கு வெற்றி கிடைக்குமா?
வியன்னா: பரபரப்பான சூழ்நிலையில் அணு பொருள் விற்பனை அமைப்பின் (என்.எஸ்.ஜி.) 2 நாள் கூட்டம் நாளை வியன்னாவில் தொடங்குகிறது.
இந்தியாவின் அணு வர்த்தகத்திற்கு பச்சைக் கொடி காட்டுவதற்கும், இந்தியா கோரிய நிபந்தனையற்ற சலுகை குறித்து பரிசீலிக்கவும் ஆகஸ்ட் 21 மற்றும் 22 ஆகிய தேதிகளில் என்.எஸ்.ஜி. கூடி விவாதித்தது. அப்போது 45 உறுப்பினர்களில் பாதிப்பேர் இந்தியாவுக்கு நிபந்தனையற்ற சலுகை வழங்க எதிர்ப்பு தெரிவித்ததால் உடன்பாடு ஏற்படவில்லை.
இதையடுத்து என்.எஸ்.ஜி.யில் தாக்கல் செய்த வரைவறிக்கையை இந்தியாவும், அமெரிக்காவும் சேர்ந்து திருத்தம் செய்தன. இந்த திருத்த வரைவறிக்கை என்.எஸ்.ஜியில் தாக்கல் செய்யப்பட்டது. ஆனால் ஆஸ்திரியா, சுவிட்சர்லாந்து, நியூசிலாந்து உள்ளிட்ட பல நாடுகள் இந்த திருத்த வரைவறிக்கைக்கு அதிருப்தி தெரிவித்தன.
மேலும், இன்னொரு அடியாக, ஆயுதக் கட்டுப்பாட்டுக் கழகம் இந்த திருத்த வரைவறிக்கையை அப்படியே நிராகரிக்க வேண்டும் என கோரிக்கை விடுத்துள்ளது. இதனால் இந்தியா பெரும் அதிர்ச்சி அடைந்துள்ளது. என்.எஸ்.ஜியில் இந்தியாவுக்கு ஒப்புதல்கிடைக்குமா, இந்திய - அமெரிக்க அணு சக்தி ஒப்பந்தம் நிறைவேறுமா என்பது பெரும் கேள்விக்குறியாகியுள்ளது.
இந்த நிலையில், 2 நாள் என்.எஸ்.ஜி. கூட்டம் நாளை வியன்னாவில் தொடங்குகிறது. இக்கூட்டத்தில் இந்தியாவின் திருத்த வரைவறிக்கை குறித்து பரிசீலிக்கப்படும்.
இந்தக் கூட்டத்தில் இந்தியாவால் ஏற்க முடியாத அளவுக்கு நிபந்தனைகள் போடப்பட்டால், என்.எஸ்.ஜி. கூட்டத்திலிருந்து இந்தியா வெளியேறும் என இந்திய தரப்பில் கூறப்பட்டுள்ளது. ஏற்கனவே இந்த கருத்ைத இந்தியா தெரிவித்துள்ளது என்பது நினைவிருக்கலாம்.
இருப்பினும் எந்தவித சிக்கலுமின்றி இந்தியாவுக்கு அனுமதி கிடைக்க அமெரிக்கா தீவிரமாக முயற்சித்து வருகிறது.












Click it and Unblock the Notifications