கோவை-திருப்பி விடப்பட்ட சோனியா விமானம்
கோவை: காங்கிரஸ் தலைவர் சோனியா காந்தி வந்த சிறப்பு விமானம் மோசமான வானிலை காரணமாக கோவை விமான நிலையத்தில் தரையிறங்க முடியாமல் பெங்களூருக்குத் திருப்பி விடப்பட்டது.
ஈரோட்டில் நடைபெறும் காங்கிரஸ் பொதுக் கூட்டத்தில் பங்கேற்பதற்காக சோனியா காந்தி இன்று பிற்பகல் சிறப்பு விமானம் மூலம் கோவை வந்தார். அங்கிருந்து ஹெலிகாப்டர் மூலம் ஈரோடு செல்ல அவர் திட்டமிட்டிருந்தார்.
அதன்படி 3 மணியளவில் சோனியா விமானம் கோவை வந்தது. ஆனால் மோசமான வானிலை காரணமாக விமானம் தரையிறங்க முடியவில்லை. இதையடுத்து விமானம் பெங்களூருக்கு திருப்பி விடப்பட்டது.
தற்போது சோனியா காந்தி பெங்களூர் விமான நிலையத்திலேயே தங்கியிருக்கிறார். வானிலை சரியானவுடன் அவரது விமானம் கோவை கிளம்பிச் செல்லும் எனத் தெரிகிறது.
நாளை பிரதமர் வருகை:
இதற்கிடையே சென்னை பல்கலைக்கழக 150வது ஆண்டு விழாவில் பங்கேற்க பிரதமர் மன்மோகன் சிங் நாளை சென்னை வருகிறார்.
பிரதமர், சோனியா வருகையையொட்டி சேலம், ஈரோடு, சென்னை ஆகிய நகரங்களில் பலத்த பாதுகாப்புக்கு ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது.
ஈரோட்டில் பொதுக் கூட்டத்தில் பங்கேற்கும் சோனியா காந்தி, இரவு சென்னை வந்து தங்குகிறார்.
நாளை சென்னை பல்கலைக்கழகத்தில் நடைபெறும் சிறப்பு பட்டமளிப்பு விழாவில் சோனியாவுக்கும், பிரதமர் மன்மோகன் சிங், முதல்வர் கருணாநிதி ஆகியோருக்கு கெளரவ டாக்டர் பட்டம் வழங்கப்படுகிறது.
பல்கலைக்கழக 150வது ஆண்டு நிறைவு விழாவிலும் இவர்கள் பங்கேற்கின்றனர்.
இதற்காக பிரதமர் மன்மோகன் சிங் நாளை காலை 10.15 மணிக்கு சென்னை வருகிறார். பின்னர் அவரும், சோனியா காந்தியும் சேலம் செல்கின்றனர். அங்கு சேலம் உருக்காலை விரிவாக்கத் திட்டத்தை தொடங்கி வைக்கின்றனர்.
சேலம் நிகழ்ச்சியை முடித்து விட்டு அங்கிருந்து இரு தலைவர்களும் டெல்லி திரும்புவார்கள்.
இதையொட்டி சென்னை, சேலம், ஈரோடு ஆகிய நகரங்களில் பலத்த பாதுகாப்புக்கு ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது. விழா நடைபெறும் இடங்களில் மெட்டல் டிடெக்டர் கருவிகள் பொருத்தப்பட்டுள்ளன. அங்கு வரும் அனைவரும் தீவிர சோதனையிடப்படுகின்றனர்.
சோனியா காந்தியின் வருகையையொட்டி ஈரோடு நகரம் திருவிழாக் கோலம் பூண்டுள்ளது. அதேபோல சேலத்திலும் காங்கிரஸார் சோனியாவை வரவேற்க பிரமாண்ட ஏற்பாடுகளைச் செய்து வருகின்றனர்.












Click it and Unblock the Notifications