சங்ககிரி எருது ஆட்டத்திற்கு உயர்நீதிமன்றம் தடை
சென்னை: சேலம் மாவட்டம் சங்ககிரி பகுதியில் பாரம்பரியமாக நடத்தப்பட்டு வரும் எருது ஆட்டம் என்கிற வீர விளையாட்டுக்கு சென்னை உயர்நீதிமன்றம் இடைக்காலத் தடை விதித்துள்ளது.
சங்ககிரி தாலுகா கூடலூர் கிராமத்தைச் சேர்ந்த மாதவன் என்பவர் சென்னை உயர்நீதிமன்றத்தில் பொதுநலன் வழக்கு ஒன்று தாக்கல் செய்துள்ளார்.
அதில், சேலம் மாவட்டம் சங்ககிரி தாலுகாவில் ஸ்ரீ முத்து முனியப்பன் கோயில் உள்ளது. தேவராஜபாளையம், ஆண்டிப்பாளையம், குன்னிப்பாளையம், மேட்டு வளைவு ஆகிய 4 கிராமங்களைச் சேர்ந்தோர் ஆவணி மாதம் தோறும் இக்கோயிலில் திருவிழா நடத்துவார்கள். அப்போது எருது ஆட்டம் என்ற பெயரில் நிகழ்ச்சி ஒன்று நடைபெறும்.
காளை மாடு ஒன்றின் கழுத்தில் கயிறு கட்டி இருபக்கமும் இரண்டு பேர் இழுத்து நின்றபடி அதனை கோபமூட்டி முட்டச் செய்வார்கள். இதற்காக அதற்கு போதைப் பொருள் கொடுத்தும், வாலை முறுக்கியும் அதனை கொடுமைப்படுத்துவார்கள்.
மிருகவதை தடுப்பு சட்டத்தின் கீழ் இது தவறானது. இதற்கு தடை விதிக்கக்கோரி மாவட்ட நிர்வாகத்திடம் மனு கொடுத்தும் எவ்வித நடவடிக்கையும் எடுக்கப் படவில்லை. இந்நிலையில் நாளை இந்த திருவிழா கொண்டாடப்படு கிறது. எனவே இந்த எருதாட்டம் நிகழ்ச்சிக்கு தடை விதிக்க வேண்டும் என்று கோரியிருந்தார்.
இதை விசாரித்த தலைமை நீதிபதி ஏ.கே.கங்குலி, இப்ராகிம் கலிபுல்லா ஆகியோர் அடங்கிய டிவிஷன் பெஞ்ச், எருது ஆட்டம் நிகழ்ச்சிக்கு தடை விதித்து நீதிபதிகள் உத்தரவிட்டனர்.
இருப்பினும் கோயில் சன்னதியில் எருதைக் கொண்டு வந்து வழிபட தடையில்லை என நீதிபதிகள் உத்தரவில் தெரிவித்துள்ளனர்.












Click it and Unblock the Notifications