பள்ளிகளுக்கு குண்டு மிரட்டல் விடுத்த மர்ம பெண்
சென்னை: சென்னையில் பல்லாவரம், குரோம்பேட்டை ஆகிய பகுதிகளில் உள்ள இரு பள்ளிகளில் வெடிகுண்டு வைக்கப்பட்டுள்ளதாக பெண் ஒருவர் தொலைபேசியில் மிரட்டல் விடுத்ததையடுத்து அங்கு பெரும் பதற்றம் நிலவியது.
பல்லாவரத்தை அடுத்த நாகல்கேணியில் உள்ள ஹோலி கிராஸ் பள்ளிக்கு இன்று காலை வெடிகுண்டு மிரட்டல் வந்தது.
தொலைபேசியில் பேசிய பெண் பள்ளியில் வெடிகுண்டு வைக்கப்பட்டுள்ளதாகக் கூறிவிட்டு வைத்தார். இதையடுத்து போலீசாருக்கு தகவல் தரப்பட்டது.
போலீசார் விரைந்து சென்று மாணவ-மாணவிகளை வகுப்பறைகளில் இருந்து வெளியேற்றி மைதானத்தில் உட்கார வைத்தனர்.
பின்னர் மோப்ப நாய்களுடன் வந்த வெடிகுண்டு நிபுணர்கள் பள்ளி முழுவதும் சோதனையிட்டபோது குண்டு ஏதும் சிக்கவில்லை.
அதேபோல குரோம்பேட்டையில் உள்ள ஒரு தனியார் பள்ளிக்கும் வெடிகுண்டு மிரட்டல் வந்தது. சமையல் அறையில் வெடிகுண்டு வைக்கப்பட்டுள்ளதாக மிரட்டல் வந்ததையடுத்து பெரும் பதற்றம் ஏற்பட்டது.
அங்கும் போலீசார் சோதனை நடத்தியும் குண்டு ஏதும் சிக்கவில்லை.
இந்த இரு பள்ளிகளிலும் போலீசார் சோதனை நடத்துவதை அறிந்த மாணவ-மாணவிகளின் பெற்றோர் அலறியடித்துக் கொண்டு ஓடி வந்து குழந்தைகளை வலுக்கட்டாயமாக அழைத்துச் சென்றனர்.
அங்கு பதற்றமான சூழல் நிலவியதால் இரு பள்ளிகளும் மூடப்பட்டன.
இதற்கிடையே பள்ளிகளில் குண்டு என்ற புரளி கிளம்பியதால் மற்ற பள்ளிகளையும் பெற்றோர் முற்றுகையிட்டு குழந்தைகளை வீடுகளுக்கு அழைத்துச் சென்றனர்.
இதனால் பல்லாவரம், குரோம்பேட்டை, அகனாபுத்தூர் ஆகிய பகுதிகளில் சுமார் 15க்கும் மேற்பட்ட பள்ளிகளுக்கு விடுமுறை விட வேண்டிய நிலைக்கு நிர்வாகங்கள் தள்ளப்பட்டன.












Click it and Unblock the Notifications