வெட்கம் கெட்ட அரசு பதவி விலக வேண்டும்: காரத்
டெல்லி: மன்மோகன் சிங் தலைமையிலான ஐக்கிய முற்போக்குக் கூட்டணி அரசு மக்களிடமும், நாடாளுமன்றத்திடமும் பொய் சொல்லியுள்ளது. இது வெட்கம் கெட்ட அரசு. உடனடியாக இந்த அரசு விலக வேண்டும் என மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி பொதுச் செயலாளர் பிரகாஷ் காரத் காட்டமாக கூறியுள்ளார்.
டெல்லியில் செய்தியாளர்களிடம் காரத் பேசுகையில், இந்த அரசு வெட்கம் கெட்ட அரசு. மக்களிடமும், நாடாளுமன்றத்திலும் பொய்யான தகவல்களைக் கொடுத்து ஏமாற்றியுள்ளது. இந்த அரசு இனியும் பதவியில் நீடிக்கக்கூடாது. உடனடியாக மன்மோகன்சிங் அரசு பதவி விலக வேண்டும்.
இந்த அரசுக்கு எதிராக நம்பிக்கை இல்லாத் தீர்மானம் கொண்டு வருவது குறித்து யோசித்து வருகிறோம். இதற்காக மற்ற கட்சிகளின் ஆதரவைத் திரட்டப் போகிறோம்.
இந்த அரசு பதவி விலகுவதைத் தவிர வேறு வழியில்லை. ஆனால் இவர்கள் ராஜினாமா செய்யவும் மாட்டார்கள், நாடாளுமன்றத்தின் சிறப்புக் கூட்டத்தைக் கூட்டவும் மாட்டார்கள். காரணம் இது வெட்கம் கெட்ட அரசு.
இந்திய - அமெரிக்க அணு சக்தி ஒப்பந்தம் தொடர்பாக ஆரம்பத்திலிருந்தே இந்த அரசு மக்களிடமும், நாடாளுமன்றத்திலும் பொய் பேசி வருகிறது.
இந்தியா அணு ஆயுத சோதனையை நடத்தினால் எரிபொருள் சப்ளையை அமெரிக்கா துண்டிக்கும் என்பது இந்திய அரசுக்கு முன்பே தெரியும். ஆனால் அதை சொல்லாமல் நாட்டை ஏமாற்றியுள்ளனர், தவறான தகவல்களைத் தெரிவித்து திசை திருப்பியுள்ளனர்.
விரைவில் இடதுசாரிகளும், பகுஜன் சமாஜ் கட்சி, தெலுங்கு தேசம், மதச்சார்பற்ற ஜனதாதளம் உள்ளிட்ட கட்சிகள், குடியரசுத் தலைவர் பிரதீபா பாட்டீலைச ந்தித்து, உடனடியாக நாடாளுமன்றத்தின் குளிர்காலக் கூட்டத் தொடரை கூட்ட வேண்டும் என கோரிக்கை விடுக்கவுள்ளோம்.
இந்த அரசு பருவ காலத்தையே மாற்றத் துணிந்து விட்டது. எங்காவது அக்டோபரில் மழைக் காலம் வருவதாக கேள்விப்பட்டிருக்கிறோமா?. ஆனால் இந்த அரசு மழைக் காலக் கூட்டத் தொடரை அக்டோபர் 17ம் தேதி கூட்டுவதாக தெரிவிக்கிறது.
தனக்கு எதிராக நம்பிக்ைக இல்லாத் தீர்மானம் வந்து விடக் கூடாது என்பதில் இந்த அரசு கவனமாக உள்ளது. இதனால்தான் கடந்த லோக்சபாக் கூட்டத் தொடரை அது இன்னும் முடித்து வைக்காமல் காலவரையின்றி தள்ளி வைத்துள்ளது.
நாடாளுமன்ற நடைமுறைப்படி, ஒரு கூட்டத் தொடரை முடித்து வைக்காமல் அது தொடர்ந்தால், கடந்த கூட்டத் தொடரில் கொண்டு வரப்பட்ட தீர்மானத்தை மீண்டும் கொண்டு வர முடியாது. இதை உணர்ந்தே கடந்த கூட்டத் தொடரை அரசு முடித்து வைக்காமல் ஒத்தி வைத்துள்ளது என்றார் காரத்.