அணு ஆயுத சோதனை: யுஎஸ் பொய் சொல்கிறது-இந்தியா

இந்திய - அமெரிக்க அணு சக்தி விவகாரம் தொடர்பாக அமெரிக்க நாடாளுமன்றத்தின் காங்கிரஸ் வெளியுறவு குழு தலைவர் கேட்ட கேள்விகளுக்கு அமெரிக்க அரசு அளித்த பதில் குறித்த விவரம் சில நாட்களுக்கு முன்பு வெளியாகி பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
அந்தக் கடிதத்தில், இந்தியா அணு ஆயுத சோதனை நடத்தினால் உடனடியாக அமெரிக்க அரசு ஒப்பந்தத்தை ரத்து செய்து விடும் என அதில் கூறப்பட்டுள்ளது. மேலும் எரிபொருள் சப்ளையும் நிறுத்தப்பட்டு விடும் எனவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.
இது இந்தியாவில் பெரும் சலசலப்பை ஏற்படுத்தியுள்ளது. முதலில் இதுகுறித்து இந்திய அரசு சார்பில் வெளிப்படையான கருத்து தெரிவிக்கப்படவில்லை. இந்தியாவுக்கு அணு ஆயுத சோதனை நடத்துவதற்குத் தடை இல்லை. அதேபோல அமெரிக்கா ரியாக்ட் செய்யவும் தடை இல்லை என்று பிரதமர் விளக்கியிருந்தார்.
அமெரிக்காவின் அப்பட்டமான பொய்:
ஆனால் தற்போது அமெரிக்க அரசின் இந்தக் கடிதம் குறித்து இந்தியாவின் தரப்பில் அதிருப்தி வெளியிடப்பட்டுள்ளது. அமெரிக்க அரசின் நிபந்தனைகள் இந்தியாவுக்கு முன்பே தெரியும் என்று கூறப்பட்டிருப்பது அப்பட்டமான பொய் என்று இந்திய அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.
மேலும், அணு எரிபொருள் சப்ளை தொடர்பாக அமெரிக்க வெளியுறவு துறை அமைச்சகம் அனுப்பியுள்ள கடிதத்தில் முரண்பாடான தகவல்கள் இடம் பெற்றிருப்பதாகவும் இந்திய அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.
எரிபொருள் சப்ளை தொடர்பாக அளிக்கப்பட்ட உறுதிமொழிகளின் அடிப்படையில்தான் 123 பேச்சுவார்த்தை நடத்தப்பட்டது. அதன்பேரில் போடப்பட்ட 123 ஒப்பந்தத்தில் அணு ஆயுத சோதனை நடத்துவது தொடர்பாக எந்த வார்த்தையும் இடம் பெறவில்லை என்று இந்திய அதிகாரிகள் தெரிவிக்கின்றனர்.
இதுகுறித்து அரசியல் ரீதியாக அமெரிக்க அரசிடம் பேசப்படும் எனவும் இந்திய அதிகாரிகள் தரப்பில் கூறப்பட்டுள்ளது.
அமெரிக்க அரசின் கடிதம் குறித்து இந்தியத் தரப்பிலிருந்து அதிருப்தி வெளியாகியிருப்பது புதிய பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. இதன் மூலம் இந்திய - அமெரிக்க அணு சக்தி ஒப்பந்தம் நிறைவேறுவதில் மேலும் சில சிக்கல்கள் எழலாம் எனவும் தெரிகிறது.












Click it and Unblock the Notifications