பிஎம்டபிள்யூ வழக்கு: முன்னாள் கடற்படை தளபதி பேரனுக்கு 5 ஆண்டு சிறை
டெல்லி: டெல்லியில் பிஎம்டபிள்யூ காரை தாறுமாறாக ஓட்டி சிறுவன் உள்பட 6 பேரைக் கொன்ற வழக்கில் குற்றவாளி என அறிவிக்கப்பட்ட முன்னாள் கடற்படைத் தளபதி நந்தாவின் பேரன் சஞ்சீவ் நந்தாவுக்கு டெல்லி கோர்ட் 5 ஆண்டு கடுங்காவல் தண்டனை அளித்து தீர்ப்பளித்தது.
இந்த பயங்கர விபத்தில் மெஹந்தி ஹசன், குலாப், நசீர், போலீஸ்காரர்களான ரஜன் குமார், ராம்ராஜ், தேரு லால் ஆகியோர் உயிரிழந்தனர். 1999ம் ஆண்டு ஜனவரி 10ம் தேதி இந்த விபத்து நடந்தது.
சமீபத்தில்தான் சஞ்சீவ் நந்தா உள்ளிட்ட 4 பேர் குற்றவாளிகள் என டெல்லி கோர்ட் தீர்ப்பளித்திருந்தது. நேற்று இந்த வழக்கில் குற்றவாளிகளுக்கு தண்டனை அறிவிக்கப்பட்டது. அதன்படி சஞ்சீவ் நந்தாவுக்கு 5 ஆண்டு சிறைத் தண்டனை அளிக்கப்பட்டது. அவர் ஏற்கனவே சிறையில் இருந்த காலத்தை தண்டனைக் காலத்திலிருந்து கழித்துக் கொள்ளலாம் என நீதிபதி உத்தரவிட்டார். அபராதம் ஏதும் விதிக்கப்படவில்லை.
சாட்சியங்களை அழித்ததாக குற்றம் சாட்டப்பட்ட தொழிலதிபர் ராஜீவ் குப்தாவுக்கு ஒரு ஆண்டு சிறை, ரூ.10,000 அபராதம், வாட்ச்மேன் போலா நாத், டிரைவர் ஷியாம் சிங் ஆகியோருக்கு தலா 6 மாத சிறை, ரூ.100 அபராதம் விதிக்கப்பட்டது.