தீர்வை நோக்கி டாடா நானோ ஆலை பிரச்சனை?

மேற்கு வங்க மாநிலம் சிங்கூரில் அமையவுள்ள டாடா நிறுவனத்தின் நானோ கார் தொழிற்சாலைக்கு தரப்பட்ட சுமார் 1,000 ஏக்கரில் விவசாயிகளிடம் கட்டாயப்படுத்தி வாங்கப்பட்ட 400 ஏக்கரை திரும்பத் தர வேண்டும் என்று கோரி திரிணமூல் காங்கிரஸ் தலைவர் மம்தா பானர்ஜி போராட்டம் நடத்தி வருகிறார்.
இதையடு்த்து சிங்கூரை விட்டே வெளியேறுவதாக டாடா நிறுவனம் அறிவித்தது. இதைத் தொடர்ந்து மம்தா பானர்ஜி இறங்கி வந்தார். இந்த விவகாரத்தில் நிலத்தை கையப்படுத்திய மாநில அரசுடன் பேச்சு நடத்தவும் முன் வந்தார்.
மம்தா-அரசு தரப்பு பேச்சு நடத்த மேற்கு வங்க ஆளுநர் கோபால் கிருஷ்ண காந்தி தான் முயற்சி எடுத்தார். நேற்று கடும் இழுபறிக்குப் பின் பேச்சுவார்த்தை தொடங்கியது.
இதில் மம்தா சார்பில் அவரது கட்சியின் மூத்த எம்பிக்களும், கட்சியின் விவசாய அணியினரும், அரசின் சார்பில் அதிகாரிகளும் கலந்து கொண்டனர். இன்றும் பேச்சு தொடர்ந்து கொண்டுள்ளது.
இதில் முன்னேற்றம் ஏற்பட்டுள்ளதாகக் கூறப்படுகிறது.
அதில் விவசாயிகளுக்கு கூடுதலாக இழப்பீடு வழங்கவும், அரசு தனது நிலத்தில் 44 ஏக்கரை டாடாவுக்கு வழங்கவும் முன் வந்துள்ளதாகத் தெரிகிறது.
அதே போல 400 ஏக்கரை திரும்பத் தர வேண்டும் என்று கோரிய மம்தா தரப்பு, 250 ஏக்கரை திருப்பித் தந்தால் போதும் என்று கூறியுள்ளதாகத் தெரிகிறது. இதனால் பிரச்சனைக்கு தீர்வு ஏற்படலாம் எனக் கருதப்படுகிறது.












Click it and Unblock the Notifications