தரமற்ற விதை: விவசாயிகள் கலெக்டர் அலுவலக முற்றுகை
பெரம்பலூர்: பெரம்பலூர் அருகே தரமற்ற விதைகளை விற்பனை செய்த நிறுவனம் மீது நடவடிக்கை எடுக்கக்கோரி விவசாயிகள் கலெக்டர் அலுவலகத்தை முற்றுகையிட்டனர்.
பெரம்பலூர் அருகே உள்ளது நூத்தப்பூர். இந்த கிராமத்தில் 200க்கும் மேற்பட்ட விவசாயிகள் சுமார் 550 ஏக்கர் பரப்பளவில் விவசாயம் செய்கின்றனர். ஆத்தூரைச் சேர்ந்த தனியார் நிறுவனத்தின் பருத்தி விதைகளை வாங்கி விதைத்திருந்தனர்.
ஆனால், மூன்று தினங்களில் முளைக்க வேண்டிய அந்த விதை 25 நாட்களாகியும் முளைக்கவில்லை. இதுகுறித்து அந்த கம்பெனியில் விவசாயிகள் புகார் தெரிவித்தும், முறையான பதில் இல்லை.
இதனால் ஆவேசம் அடைந்த விவசாயிகள் தரமற்ற விதையை விற்பனை செய்த அந்த தனியார் நிறுவனத்தின் மீது உரிய நடவடிக்கை எடுக்க கோரி பெரம்பலூர் மாவட்ட கலெக்டர் அலுவலகத்தை முற்றுகையிட்டு போராட்டம் நடத்தினர்.
அவர்களிடம் மாவட்ட கலெக்டர் அனில்மேஷராம் பேச்சு வார்த்தை நடத்தினார். அப்போது, சம்பந்தப்பட்ட கம்பெனி மீது உரிய நடவடிக்கை எடுக்கப்படும் என்று உறுதியளித்தார். இதையடுத்து, விவசாயிகள் கலைந்து சென்றனர்.












Click it and Unblock the Notifications