பெரம்பலூரில் சட்டக் கல்லூரி: அமைச்சர் ராசா
பெரம்பலூர்: பெரம்பலூர் மாவட்டத்தில் அடுத்த ஆண்டு சட்டக் கல்லூரி தொடங்கப்படும் என்று மத்திய அமைச்சர் ஆ.ராசா தெரிவித்துள்ளார்.
பெரம்பலூர் அரசு மேல்நிலைப்பள்ளியில் நடந்த விழாவில் மத்திய தகவல் தொடர்புத்துறை அமைச்சர் ராசா கலந்து கொண்டார். மாணவ, மாணவிகளுக்கு இலவச சைக்கிளை வழங்கி, பின்னர் அவர் பேசியதாவது:
தமிழகத்தில் முதல்வர் கருணாநிதியின் ஆட்சியில் அனைத்து துறைகளும் மறுமலர்ச்சியை கண்டு வருகிறது. குறிப்பாக கல்வித் துறையில் மிகப்பெரிய வளர்ச்சி ஏற்பட்டுள்ளது.
அதில், தற்போது பட்டப்படிப்பு வரை இலவச கல்வி என்ற அறிவிப்பு நடைமுறைபடுத்தப்பட்டுள்ளது. கிராமப்புறங்களில் கல்வி மறுக்கப்பட்ட தாழ்த்தப்பட்ட, பிற்படுத்தப்பட்ட மாணவர்கள் பல்வேறு துறைகளில் முன்னேற வேண்டும் என்ற நோக்கில் பல ஆண்டுகளாக அரசு சார்பில் தொடங்கப்படாமல் இருந்த பொறியியல் கல்லூரிகள், மருத்துவக் கல்லூரிகள், கலைக் கல்லூரிகளை தொடங்க முதல்வர் கருணாநிதி உத்தரவிட்டுள்ளார்.
இதையடுத்து பல மாவட்டங்களில் புதிய கல்லூரிகள் தொடங்கப்பட்டு வருகின்றது. வரும் ஆண்டில் பெரம்பலூர் மாவட்டத்தில் சட்டக் கல்லூரி தொடங்க நடடிவக்கை எடுக்கப்பட்டு வருகின்றது என்றார்.