திமுகவுக்கு தேர்தலில் ஒரு சீட் கூட கிடைக்காது: ராமதாஸ்
மதுரை: சட்டசபைக்கு தேர்தல் வந்தால் திமுகவுக்கு ஒரு சீட் கூட கிடைக்காது என்று பாமக நிறுவனர் டாக்டர் ராமதாஸ் தெரிவித்துள்ளார்.
இதுகுறித்து மதுரையில் செய்தியாளர்களிடம் அவர் பேசுகையில், டெல்லியைச் சேர்ந்த அமைப்புகள் நடத்திய சர்வேயில், ஊழல் அபாயகரமாக உள்ள மாநிலங்களில் காஷ்மீர், பீகார், மத்திய பிரதேசம், உத்தரபிரதேசம் ஆகியவை இடம் பெற்றுள்ளன.
ஊழல் உச்சகட்டமாக உள்ள மாநிலங்களின் பட்டியலில் கர்நாடகம், ராஜஸ்தான் மாநிலங்களுடன் தமிழ்நாடும் உள்ளது. போலீஸ், வனம், பத்திரபதிவு, மின்வாரியம், கல்வி, வருவாய் துறைகளில்தான் ஊழல் அதிகம். நேர்மையான ஐஏஎஸ், ஐபிஎஸ் அதிகாரிகளை ஓரம்கட்டப்படும் சூழல் மாறினால்தான் ஊழல் குறையும்.
ஊழலின் மகுடமாக மணல் கொள்ளை உள்ளது. கடந்த 2001ல் திமுக எதிர்கட்சியாக இருந்தபோது, காவல் துறையின் ஈரல் கெட்டுபோய்விட்டது என்று கருணாநிதி கூறினார். தற்போது அது எந்த நிலையில் உள்ளது என்பதை அவர் கூறவில்லை. போலீஸ் துறையில் அரசியல்வாதிகள் குறிப்பாக ஆளுங்கட்சியின் தலையீடு இருக்குக் கூடாது.
திமுக ஆட்சியில் போடப்பட்ட 39 புரிந்துணர்வு ஒப்பந்தங்களின் பலன்கள் குறித்து வெள்ளை அறிக்கை வெளியிட வேண்டும். சென்னையில் அனுமதியின்றி கட்டப்பட்ட கட்டடங்களை இடிக்க உச்சநீதிமன்றம் ஏற்கனவே உத்தரவிட்டது.
இந்த விஷயத்தில் 2 முறை அவசர சட்டத்திருத்தம் கொண்டு வந்தது தமிழக அரசு. உச்சநீதிமன்ற உத்தரவை அமல்படுத்தி இருந்தால் சரவணா ஸ்டோர்ஸில் தீவிபத்து ஏற்பட்டிருக்காது. எனவே அவசர சட்டத்தை வாபஸ் பெற வேண்டும். விதிமுறைகளை மீறி கட்டப்பட்ட கட்டடங்கள் இடிக்கப்பட வேண்டும்.
திமுக ஆட்சிக்கு வந்த பிறகு ஒரு யூனிட் கூட மின் உற்பத்தி செய்ய நடவடிக்கை எடுக்கப்படவில்லை. பல தனியார் மின் உற்பத்தி நிலையங்கள் முடப்பட்டுள்ளன. அனல் மின் நிலையங்களுக்கு தரமற்ற நிலக்கரி கொள்முதல் செய்யப்பட்டுள்ளதாக கூறப்படுகிறது. இதுகுறித்து விசாரணை நடத்த வேண்டும்.
தமிழக அரசிடம் ஒரு ரூபாய்க்கு ரேஷன் அரிசி வேண்டும் என்று யாரும் கோரவில்லை. இந்த அறிவிப்பால் கடத்தல்காரர்களுக்குத்தான் இரு மடங்கு பணம் கிடைக்கும்.
இன்றைய சூழலில் தமிழகத்தில் சட்டசபை தேர்தல் வந்தால் திமுகவுக்கு ஒரு இடம் கூட கிடைக்காது. லோக்சபா தேர்தலின்போது கூட்டணி குறித்து முடிவு செய்து அறிவிக்கப்படும் என்றார்.