அவதூறு செய்தி: குமுதம், விகடனுக்கு ஜெ. வக்கீல் நோட்டீஸ்
சென்னை: தன்னைப் பற்றியும், தனது தோழி சசிகலா குறித்தும் அவதூறாக செய்தி வெளியிட்டதாக கூறி ஜூனியர் விகடன் மற்றும் குமுதம் ரிப்போர்ட்ஸ் வார இதழ்களுக்கு அதிமுக பொதுச் செயலாளர் ஜெயலலிதா வக்கீல் நோட்டீஸ் அனுப்பியுள்ளார்.
ஒரு பத்திரிகைக்கு தனது வக்கீல் நவநீத கிருஷ்ணன் மூலமாக ஜெயலலிதா அனுப்பியுள்ள நோட்டீஸில், கட்சியின் பொதுச் செயலாளர் நான் தான்; போடுங்கள் கையெழுத்து என்று சசிகலா கூறியதாக சசிகலா அரங்கேற்றிய பவர்கட் பிளான் என்ற தலைப்பில் செய்தி வெளியாகியுள்ளது.
இந்த செய்தி எனது புகழுக்கு களங்கம் விளைவிக்கும் வகையில் திட்டமிட்டு விஷமத்தனத்துடன் உண்மைக்கு புறம்பாக புனையப்பட்ட தகவல்களை கொண்டு வெளியிடப்பட்டுள்ளது.
எனது அரசியல் எதிரியான கருணாநிதி உத்தரவுபடியே அந்த செய்தி வெளியிடப்படடுள்ளது. இந்த பொய்யான தகவல்களை வெளியிட்ட பத்திரிகை நிபந்தனையற்ற மன்னிப்பு கேட்பதுடன், அது தொடர்பான விளக்கத்தை வெளியிட வேண்டும்.
மன்னிப்பு கேட்காவிட்டால் ரூ.10 கோடி வழங்கக் கோரி மானநஷ்ட வழக்கு தொடரப்படும். பத்திரிகை கவுன்சிலிலும் புகார் செய்யப்படும் என்றும் அந்த நோட்டீசில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
இன்னொரு இதழுக்கு ஜெயலலிதா அனுப்பியுள்ள வக்கீல் நோட்டீஸில் "எம்ஜிஆர் மறைவுக்கு பின் திமுகவில் சேர முயன்றார் ஜெயலலிதா'. தூது சென்றவர்கள் பகீர் வாக்குமூலம் என்று செய்தி வெளிவந்தது. இதற்கு அந்த பத்திரிகை மன்னிப்பு கேட்காவிட்டால், ரூ.10 கோடி கோரி அவதூறு வழக்கு தொடரப்படும் என்றும் ஜெயலலிதா தெரிவித்துள்ளார்.












Click it and Unblock the Notifications