மதுரை அரசு மருத்துவமனை மேம்பாட்டுக்கு ரூ.150 கோடி: அன்புமணி
மதுரை: மதுரை, அரசு ராஜாஜி மருத்துவமனையை அதிநவீன சிகிச்சை வசதிகளுடன் மேம்படுத்தும் வகையில் சிறப்பு பிரிவு அமைக்கப்படும். இதற்காக ரூ.150 கோடி நிதி ஒதுக்க திட்டமிடப்பட்டுள்ளது என்று மத்திய சுகாதாரத் துறை அமைச்சர் அன்புமணி கூறியுள்ளார்.
மதுரை வந்த அவர் செய்தியாளர்களிடம் பேசுகையில், மதுரையில் உள்ள அரசு ராஜாஜி மருத்துவமனையை அதிநவீன சிகிச்சை வசதிகளுடன் மேம்படுத்தும் வகையில் சிறப்பு பிரிவு அமைக்கப்படும். இதற்காக ரூ.150 கோடி நிதி ஒதுக்க திட்டமிடப்பட்டுள்ளது.
சிறப்பு மருத்துவ நிபுணர்கள், கூடுதல் மகப்பேறு வசதிகள், நவீன புற்றுநோய் கருவிகள் உள்பட அனைத்து வசதிகளுடன் உலக தரம் வாய்ந்ததாக இந்த சிறப்பு மருத்துவ பிரிவு உருவாக்கப்படும்.
இந்த மருத்துவ பிரிவு அமைப்பதற்கான இடத்தை தேர்வு செய்து, திட்ட மதிப்பீடு தயார் செய்து தமிழக அரசு அனுப்பிய உடன் நிதி ஒதுக்கீடு செய்யப்படும். இந்த மருத்துவமனையை சிறப்பு விபத்து சிகிச்சை மையமாகவும் மேம்படுத்தப்படும். இதற்காக ரூ.10 முதல் ரூ.12 கோடி வரை ஒதுக்க மத்திய அரசு திட்டமிட்டுள்ளது.
தேசிய கிராமப்புற சுகாதாரத் திட்டத்தின் கீழ், தமிழகத்துக்கு ரூ.800 கோடி நிதி ஒதுக்கப்பட்டுள்ளது. இது இந்திய சுகாதாரத் துறை வரலாற்றில் மிகப் பெரிய சாதனையாகும் என்றார்.