தமிழகத்திலும், மத்தியிலும் மீண்டும் அமோக வெற்றி பெறுவோம்: வாசன்
முதல்வர் கருணாநிதியை அவரது கோபாலபுரம் இல்லத்தில் இன்று ஜி.கே.வாசன் சந்தித்துப் பேசினார். பின்னர் செய்தியாளர்களிடம் வாசன் பேசுகையில், முதலமைச்சர் கருணாநிதிக்கு சென்னை பல்கலைக்கழகம் சிறப்பு டாக்டர் பட்டம் அளித்து கவுரவித்தது. அதற்கு வாழ்த்தும், பாராட்டும் தெரிவிப்பதற்காக முதலமைச்சரை சந்தித்தேன்.
தமிழகத்தை பொருத்தவரை மத்திய அரசு திட்டங்கள் மிகச்சிறப்பாக செயல்பட்டு வருகின்றன. அது குறித்தும் முதலமைச்சருடன் பேசினேன். சிறப்பான செயல்பாடு குறித்து தமிழக அரசுக்கு பாராட்டையும் தெரிவித்தேன்.
எனது திட்ட அமலாக்கத்துறையின் கீழ் உள்ள 8 துறைகளின் மூலம் தமிழகத்தில் பணிகள் சிறந்த முறையில் நடைபெற்று வருவது குறித்து முதல்வரிடம் பேசினேன். அவரும் எனக்கு பல்வேறு நல்ல ஆலோசனைகளை வழங்கினார்.
கடந்த அதிமுக ஆட்சியில் மத்திய அரசின் பல்வேறு திட்டங்கள் கிடப்பில் போடப்பட்டன. தற்போது அத்தகைய நிலை முற்றிலுமாக மாறி எல்லாத் திட்டங்களும் சிறப்பாக அமல்படுத்தப்படுகின்றன.
மத்தியிலும், மாநிலத்திலும் ஒருமித்த கருத்துடைய ஆட்சிகள் இருந்தால் எல்லாத்திட்டப்பணிகளும் தங்குத்தடையின்றி மக்களை குறித்த நேரத்தில் சென்றடையும் இப்போதைய மத்திய மாநில அரசுகளால் நல்ல சான்றாக விளங்குகின்றன.
திமுக தலைமையில் வலுவான கூட்டணி
மத்தியில் ஐக்கிய முற்போக்கு கூட்டணியும், மாநிலத்தில் ஜனநாயக முற்போக்கு கூட்டணியும் தொடர்ந்து நீடித்து வருகின்றன. கடந்த நாடாளுமன்ற, சட்டமன்ற தேர்தல்களில் இந்த கூட்டணி மகத்தான வெற்றி பெற்று எப்படி மத்திய, மாநில ஆட்சிகளை கைப்பற்றியதோ அதேபோல வருகின்ற தேர்தலில் இந்த கூட்டணி மீண்டும் வெற்றி பெற்று ஆட்சி அமைக்கும்.
தேர்தல் நேரத்தில் வலுவான கூட்டணி அமைந்து வெற்றி பெற்று மீண்டும் ஆட்சியை பிடிப்போம்.
மின்வெட்டு என்பது செயற்கையாக உருவாக்கப்படுவதல்ல. இயற்கையாகவே வருவது. பல இடங்களிலும் இந்த நிலைமை தான் உள்ளது.
தமிழகத்தை பாதிப்பிலிருந்து விடுவிக்க தமிழக அரசு தொடர்ந்து உரிய நடவடிக்கைகளை எடுத்து வருகிறது. மத்திய அரசும் அதற்கு உறுதுணையாக இருக்கிறது. தற்போது உள்ள சிறு சிறு பாதிப்புகளும் விரைவில் சரியாகும் என்றார் வாசன்.
கருணாநிதியுடன் வைத்திலிங்கம் சந்திப்பு:
இதற்கிடையே, புதுச்சேரி மாநில முதல்வராக சமீபத்தில் பதவியேற்ற வைத்திலிங்கம், தனது அமைச்சர்களுடன் இன்று முதல்வர் கருணாநிதியை சந்தித்து வாழ்த்துப் பெற்றார்.
அரை மணி நேரம் நடந்த இந்த சந்திப்பின்போது, முதல்வரிடம் வைத்திலிங்கமும், அவரது அமைச்சர்களும் ஆசி பெற்றனர்.
பின்னர் செய்தியாளர்களிடம் வைத்திலிங்கம் பேசுகையில், தமிழகத்தின் முழு ஆதரவு எப்போதும் எங்களுக்கு தேவை என்பதால் தமிழக முதலமைச்சர் கருணாநிதியிடம் வாழ்த்து பெறுவதற்காகவும், அவருடைய மேலான ஆலோசனைகளை பெறுவதற்காகவும் இன்று சந்தித்தோம்.
புதுவை அரசுக்கு முழு ஆதரவை தருவதாக கருணாநிதியும் எங்களுக்கு உறுதி அளித்துள்ளார்.
புதுவையில் தற்போது எங்களிடையில் எந்த பிரச்சனையும் இல்லை. சுமுகமாகவே செயல்பட்டு வருகிறோம். முன்னாள் முதலமைச்சர் ரங்கசாமியுடனும் பேசி கொண்டிருக்கிறோம். அவரும் எங்களுடன் சுமுகமான அணுகு முறையை மேற்கொண்டுள்ளார்.
கட்சியிலுள்ள சிறு சிறு உட்கட்சி பிரச்சனைகளுக்கு தீர்வு காண டெல்லி மேலிட பார்வையாளர்கள் அடுத்த வாரம் புதுவைக்கு வருகிறார்கள். அதன்பிறகு, எல்லா நிலைமையும் சீராகி நாங்கள் அனைவரும் ஒற்றுமையுடன் நல்லமுறையில் புதுவை மக்களுக்கு பாடுபடுவோம் என்றார் வைத்திலிங்கம்.