அணு ஒப்பந்தத்தில் கையெழுத்திட யு.எஸ். போகிறார் மன்மோகன்

இந்தியாவின் 34ஆண்டு கால அணு தனிமைக்கு சமீபத்தில் என்.எஸ்.ஜி. முடிவு கட்டியது. இந்தியாவுக்கு சலுகைகள் வழங்க ஒப்புதல் தரப்பட்டது. இதைத் தொடர்ந்து இந்திய-அமெரிக்க அணு சக்தி ஒப்பந்தம் தற்போது அமெரிக்க நாடாளுமன்றத்தின் அனுமதியைப் பெறும் கட்டத்தை எட்டியுள்ளது.
புஷ் நிர்வாகத்தின் கீழ், அமெரிக்க நாடாளுமன்றத்தின் கடைசிக் கூட்டத் தொடர் இன்று தொடங்குகிறது. இக்கூட்டத் தொடரில் இந்திய அமெரிக்க அணு சக்தி ஒப்பந்தத்திற்கு ஒப்புதல் தரப்படும் எனத் தெரிகிறது. இதில் ஒப்புதல் கிடைத்து விட்டால், அடுத்து அதிபர் ஜார்ஜ் புஷ்ஷும், பிரதமர் மன்மோகன் சிங்கும் அதில் கையெழுத்திட வேண்டியதுதான் பாக்கி. அதன் பின்னர் ஒப்பந்தம் அமலுக்கு வரும்.
இதற்காக இம்மாத இறுதியில் பிரதமர் அமெரிக்கா செல்வார் எனத் தெரிகிறது. நியூயார்க்கில் நடைபெறும் ஐ.நா. கூட்டத்தில் பிரதமர் பங்கேற்று பேசுகிறார். பின்னர் வாஷிங்டன் சென்று புஷ்ஷை சந்திக்கிறார். அப்போதே அணு சக்தி ஒப்பந்தத்தில் இரு தலைவர்களும் கையெழுத்திடுவார்கள் என எதிர்பார்க்கப்படுகிறது.
இந்த பயணத்தை முடித்துக் கொண்டு பிரான்ஸ் செல்லும் பிரதமர், மார்ஷெல்ஸ் நகரில் நடைபெறும் இந்திய-ஐரோப்பிய யூனியன் மாநாட்டில் கலந்து கொள்கிறார். பின்னர் பிரெஞ்சு அதிபர் சர்கோஸியையும் சந்தித்துப் பேசுகிறார்.
ஒரு வேளை புஷ் பதவிக்காலத்திற்குள் ஒப்பந்தத்திற்கு அமெரிக்க நாடாளுமன்றத்தில் அனுமதி கிடைக்காவிட்டால் டிசம்பர் மாதம்தான் ஒப்பந்தம் அமலுக்கு வரும். அப்படி நடந்தால் இந்தியாவின் சார்பில் பிரணாப் முகர்ஜியும், அமெரிக்காவின் சார்பில் கான்டலீசா ரைஸும் கையெழுத்திடுவார்கள் எனத் தெரிகிறது.












Click it and Unblock the Notifications