விலைவாசியை உயர்த்தியவர்களுக்கு டாக்டர் பட்டம் எதற்கு? விஜயகாந்த்

கையில் சிம்னி - முகத்தில் கருப்புத் துணி:
தமிழகத்தில் அறிவிக்கப்பட்ட மற்றும் அறிவிக்கப்படாத மின்வெட்டை கண்டித்து கோவை செஞ்சிலுவை சங்கத்தின் முன்பு தேமுதிக சார்பில் ஆர்ப்பாட்டம் நடைபெற்றது.
ஆர்ப்பாட்டத்தில் கலந்த கொண்ட அக்கட்சியின் தலைவர் விஜயகாந்த் தனது கண்களை கருப்பு துணியால் கட்டிக் கொண்டு, கையில் சிம்னி விளக்கை வைத்துக் கொண்டு பேசினார்.
மிகப் பெரிய அளவில் கூடிய கூட்டத்தினர் மத்தியில் விஜயகாந்த் பேசுகையில், மின் வெட்டை தடுக்காத தமிழக அரசை கடுமையாக சாடிப் பேசினார்.
அவர் பேசுகையில், சமீபகாலமாக தமிழத்தில் ஏற்பட்டு வரும் தொடர் மின்வெட்டால் தமிழகமே இருளில் மூழ்கிவிட்டது. மக்களும் குழந்தைகளும் பெரும் சிரமத்துக்கு ஆளாகியுள்ளனர். இந்த ஆர்பாட்டத்திற்கு கோவையை தேர்ந்தெடுத்ததற்கு காரணம், இந்த மாவட்டத்தில்தான் சிறு மற்றும் குறுந்தொழில், தொழிற்சாலைகள் அதிகம் உள்ளது.
மின் வெட்டால் இங்கு தொழில் முடங்கும் அபாயம் ஏற்பட்டுள்ளது. மின்வெட்டை சீரமைக்க உரிய நடவடிக்கைகளை எடுக்காமல், மழை பெய்தால் மட்டுமே சரியாகும் என்று மின்சாரச் துறை அமைச்சர் கூறுவது கண்டிக்கத்தக்கது.
நமக்கு மொத்தம் 10,000 மெகா வாட் மின்சாரம் தேவை. நாம் உற்பத்தி செய்வது 6,500 மெகா வாட். 3,500 மெகா வாட் மின்சாரம் பற்றாக்குறையாக உள்ளது. நமக்கே பற்றாக்குறை இருக்கும்போது நெய்வேலியில் உற்பத்தி செய்யப்படும் 1,500 மெகாவாட் மின்சாரத்தை ஆந்திரா, கர்நாடகா மற்றும் கேரள மாநிலங்களுக்கு வழங்குவது அரசின் அலட்சியப் போக்கை காட்டுகிறது. அந்த மின்சாரத்தை வேறு யாருக்கும் தராமல் தமிழகத்திற்கே திருப்பி விட வேண்டும்.
தமிழகத்தில் மின் உற்பத்திக்கான எந்த நடவடிக்கையையும் திமுக அரசு எடுக்காத நிலையில் மத்திய அரசிடம் இருந்து 600 மெகா வாட் மின்சாரம் பெற்றிருப்பதாக கூறுகிறது.
அண்ணா பிறந்தநாளை முன்னிட்டு ஒரு ரூபாய்க்கு ஒரு கிலோ அரிசி தருவதாக முதல்வர் கூறியிருக்கிறார். ஏற்கனவே இரண்டு ரூபாய்க்கு அரிசி வழங்கப்படும்போதே பெரும்பாலானோர் வாங்காத நிலையில், ஒரு ரூபாய்க்கு அரிசி கொடுத்தால் யாரும் வாங்க மாட்டார்கள்.
சலுகை என்ற பெயரில் ஒரு ரூபாய்க்கு அரிசி வழங்கும் திமுக அரசு, மற்ற சமையல் பொருட்களின் விலையை பல மடங்கு உயர்த்தியுள்ளது. கவர்ச்சிகரமான திட்டங்கள் மக்களுக்கு தேவையில்லை. வளர்ச்சிகரமான திட்டங்களை அறிவித்தால் மக்களுக்கு பயன் தரும். மக்களுக்கு மானியங்களை கொடுத்து அவர்களின் வாங்கும் சக்தியை உயர்த்த வேண்டும்.
பணவீக்கம், விலைவாசி உயர்வு, டீசல் விலை உயர்வு, மின் வெட்டு என்று தமிழகமே ஸ்தம்பித்துள்ள நிலையில், விலைவாசியை உயர்த்தியவர்களுக்கு டாக்டர் பட்டம் எதற்கு?
தமிழகத்தில் நிலவும் மின் வெட்டை உடனடியாக சரிசெய்யாவிட்டால், கட்சித் தொண்டர்களை திரட்டி, நெய்வேலியில் போராட்டம் நடத்துவேன் என்றார்.
விஜயகாந்த்துடன் சேர்ந்து ஆயிரக்கணக்கான தொண்டர்களும் கருப்புத்துணியை கண்களில் கட்டிக் கொண்டு போராட்டத்தில் பங்கேற்றது வித்தியாசமாக இருந்தது.












Click it and Unblock the Notifications