திருமணத்திற்கு எதிர்ப்பு: கோவிலுக்கு பூட்டு மேல் பூட்டு
விழுப்புரம்: சங்கராபுரம் அருகே உள்ள சிவன் கோவிலில் நடக்கவிருந்த திருமணத்தை தடுக்க பூட்டு போடப்பட்டது. இதையடுத்து கோவிலுக்கு வெளியே திருமணத்தை நடத்திய திருமண வீட்டார், கல்யாணத்தை முடித்து விட்டு இன்னொரு பூட்டை போட்டு பூட்டி விட்டுச் சென்றனர்.
விழுப்புரம் மாவட்டம் சங்கராபுரத்தை அடுத்த பாக்கம் கிராமம் காலனியைச் சேர்ந்த ஆதிமூலம் மகன் இளங்கோவுக்கும் ஆரூர் கிராமத்தைச் சேர்ந்த கோவிந்தராஜ் மகள் உஷாவுக்கும் திருமணம் நிச்சயிக்கப்பட்டது.
பாக்கம் கிராமத்தில் உள்ள சிவன் கோவில் திருமணம் நடத்த திட்டமிடப்பட்டிருந்தது. அதன்படி கடந்த 4ம் தேதி காலை மணமக்களுடன் உறவினர்கள் கோவிலுக்கு வந்தனர். அப்போது கோவிலுக்கு சிலர் பூட்டு போட்டனர்.
இதையடுத்து கோவிலுக்கு வெளியே திருமண வீட்டார் திருமணத்தை நடத்தினர். பின்னர் பூட்டு மேல் இன்னொரு பூட்டைப் போட்டுவிட்டு சென்றனர். இதனால் அந்த கிராமத்தில் பரபரப்பு ஏற்பட்டது.
இதுகுறித்து கோவில் நிர்வாகத்தினர் வடபொன்பரப்பி போலீஸில் புகார் செய்தனர். புகாரில், கோவிலில் தினமும் பூஜை செய்ய வேண்டும். திருமண கோஷ்டியினர் பூட்டுப் போட்டுள்ளனர். இதுகுறித்து விசாரணை நடத்த வேண்டும் என்று கூறியுள்ளனர்.
இதையடுத்து கோவிலுக்கு பூட்டு போட்ட திருமண வீட்டாரிடம் சமரச பேச்சு வார்த்தை நடத்தினர். சுமூக தீர்வு காணும்படி காலனி மக்கள் போலீஸாரை கேட்டுக் கொண்டனர். இதையடுத்து கோவிலில் திருமண வீட்டார் போட்ட பூட்டை திறந்தனர்.
எனினும் பாக்கம் கிராமத்தில் தொடர்ந்து பதட்டம் நிலவுவதால், அசம்பாவிதங்களை தடுக்க போலீஸார் குவிக்கப்பட்டுள்ளனர். வருவாய்த் துறையினர் அமைதி குழுக்கூட்டம் நடத்தி தீர்வுகாண நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டுள்ளது.












Click it and Unblock the Notifications