அமெரிக்கன் கல்லூரியில் தொடரும் மரத்தடி வகுப்புகள்
மதுரை: மதுரை அமெரிக்கன் கல்லூரியில் தொடர்ந்து மரத்தடியில் வகுப்புகள் நடந்து வருகின்றன. நாளுக்கு நாள் மரத்தடி வகுப்புகளுக்கு வரும் மாணவர்களின் எண்ணிக்கை அதிகரித்து வருவதாக துணை முதல்வர் அன்புத்துரை தெரிவித்துள்ளார்.
அமெரிக்கன் கல்லூரி முதல்வராக இருந்தவர் ஜோசப் சின்னராஜ். இவர் சமீபத்தில் திடீரென பிஷப் கிறிஸ்டோபர் ஆசிரால் மாற்றப்பட்டார். அவருக்குப் பதில் ஜார்ஜ்செல்வக்குமார் புதிய முதல்வராக அறிவிக்கப்பட்டார்.
இதற்கு மாணவ, மாணவியர் மற்றும் ஒரு தரப்பு ஆசிரியர்களிடம் கடும் எதிர்ப்பு கிளம்பியது. இதையடுத்து செல்வக்குமார் முதல்வர் பதவியேற்க வந்தபோது அவரையும், பிஷப்பையும் மாணவ, மாணவியர் கெரோ செய்தனர். இதனால் ஏற்பட்ட தள்ளுமுள்ளைத் தொடர்ந்து போலீஸார் தடியடி நடத்தினர். இதைத் தொடர்ந்து செல்வக்குமார் முதல்வராகப் பதவியேற்றார். கல்லூரிக்கும் காலவரையின்றி விடுமுறை விடப்பட்டது.
இருப்பினும் சின்னராஜ் ஆதரவு ஆசிரியர்கள் மரத்தடிகளில் வகுப்புகளை நடத்த தீர்மானித்தனர். அதன்படி 3 நாட்களுக்கு முன்பு மரத்தடிகளில் வகுப்புகள் தொடங்கின.
இதுகுறித்து துணை முதல்வர் அன்புத்துரை கூறுகையில், வகுப்புகள் திறக்கப்படவில்லை. இதையடுத்து மரத்தடிகளில் வகுப்புகளை நடத்தி வருகிறோம். நாளுக்கு நாள் மாணவ, மாணவியரின் எண்ணிக்கை அதிகரித்து வருகிறது. இன்று (திங்கள்கிழமை) 700 மாணவ, மாணவியர் வந்துள்ளனர்.
10ம் தேதி முதல் முதுகலை வகுப்புகள் தொடங்கவுள்ளது என்றார்.
கல்லூரி வளாகத்தில் உள்ள மரத்தடிகள் அனைத்தும் பள்ளி அறைகளாக மாறியுள்ளன. மாணவ, மாணவியருக்கு ஆசிரியர்கள் பாடம் போதித்து வருகின்றனர். வகுப்புகளில் நிலவும் சூழல் மரத்தடிகளில் நிலவினாலும், கல்லூரிக்குள் ஒருவிதமான இறுக்கமான சூழ்நிலையே காணப்படுகிறது.












Click it and Unblock the Notifications