உயர் நீதிமன்ற நீதிபதிக்கு எதிராக கண்டன தீர்மானம்
டெல்லி: ரூ. 22.83 லட்சம் பணத்தை கையாடல் செய்ததாக புகாருக்கு ஆளாகியுள்ள கொல்கத்தா உயர்நீதிமன்ற நீதிபதி செளமித்ரா சென் மீது நாடாளுமன்றத்தில் கண்டனத் தீர்மானம் கொண்டு வருமாறு மத்திய அரசுக்கு உச்சநீதிமன்ற தலைமை நீதிபதி கே.ஜி.பாலகிருஷ்ணன் உத்தரவிட்டுள்ளார். இதையடுத்து செளமித்ரா சென்னை பணியிலிருந்து நீக்குவதற்கான நடவடிக்கைகளை மத்திய அரசு தொடங்கியுள்ளது.
கடந்த 1993ம் ஆண்டு இந்திய ஸ்டீல் ஆணையத்திற்கும் (செயில்), இந்திய ஷிப்பிங் கார்ப்பரேஷன் நிறுவனத்திற்கும் இடையே பிரச்சனை ஏற்பட்டது. இதையடுத்து செளமித்ரா சென், செயில் நிறுவனத்தின் ரிசீவராக நியமிக்கப்பட்டார்.
அப்போது நிறுவனத்திற்கு வந்த ரூ. 22.83 லட்சம் பணத்தை ரிசீவருடைய வங்கிக் கணக்கில் போடாமல், தனது சொந்த வங்கிக் கணக்கில் போட்டுள்ளார்.
பின்னர் 2003ம் ஆண்டு அவர் கொல்கத்தா உயர்நீதிமன்ற நீதிபதியாக நியமிக்கப்பட்டார். இந்த நிலையில் அவர் மீது கையாடல் புகார் எழுந்தது. இதையடுத்து கொல்கத்தா உயர்நீதிமன்றத்தைச் சேர்ந்த 3 நீதிபதிகள் அடங்கிய குழு விசாரணை நடத்தியது.
அப்போது நீதிபதி சென் செய்த கையாடல் உண்மைதான் எனத் தெரிய வந்தது. இதையடுத்து அவர் நீதிபதியாக பணியாற்றும் அதிகாரம் பறிக்கப்பட்டது. அவரை ராஜினாமா செய்யுமாறு உச்ச நீதிமன்ற தலைமை நீதிபதி கேட்டுக் கொண்டார். ஆனால், அதை சென் ஏற்க மறுத்தார்.
இதையடுத்து நீதிபதி செளமித்ரா சென் மீது நாடாளுமன்றத்தில் கண்டனத் தீர்மானம் கொண்டு வந்து பதவி நீக்குமாறு மத்திய அரசுக்கு சுப்ரீம் கோர்ட் தலைமை நீதிபதி கே.ஜி.பாலகிருஷ்ணன் உத்தரவிட்டுள்ளார். இதுதொடர்பாக பிரதமர் மனமோகன் சிங்குக்கு ஆகஸ்ட் 4ம் தேதி அவர் கடிதம் எழுதியுள்ளார்.
அதில், பண முறைகேடு புகாருக்கு ஆளான நீதிபதி சென் பதவி விலகுமாறு கேட்டுக் கொள்ளப்பட்டார். ஆனால் அதை அவர் செய்யவில்லை. எனவே இந்திய அரசியலமைப்புச் சட்டம் 217 (1), 124 (4) ஆகியவற்றின் கீழ் நீதிபதி சென்னுக்கு எதிராக கண்டனத் தீர்மானத்தை நாடாளுமன்றத்தில் கொண்டு வர வேண்டும் என்று கூறியுள்ளார்.
உச்சநீதிமன்றம் மற்றும் உயர்நீதிமன்ற நீதிபதிகளை நாடாளுமன்றத்தில் இதுபோன்று கண்டனத் தீர்மானம் மூலம் தான் பதவி நீக்க முடியும். நாடாளுமன்றத்தின் இரு சபைகளிலும் இந்த கண்டனத் தீர்மானத்தை நிறைவேற்றிய பின்னர் அது குடியரசுத் தலைவருக்கு அனுப்பி வைக்கப்படும். அதை ஏற்று அவர் சம்பந்தப்பட்ட நீதிபதியை டிஸ்மிஸ் செய்வார்.
உச்சநீதிமன்றத்தின் பரிந்துரையை சட்டத்துறை அமைச்சகத்திடம் பிரதமர் அனுப்பி வைத்துள்ளார். இதைத் தொடர்ந்து கண்டனத் தீர்மானத்துக்கான நடவடிக்கைகளை தொடங்கியுள்ளதாக மத்திய சட்டத்துறை அமைச்சர் எச்.ஆர்.பரத்வாஜ் தெரிவித்துள்ளார்.
விரைவில் லோக்சபா மற்றும் ராஜ்யசபா கூட்டுக் கூட்டம் கூட்டப்பட்டு அதில் நீதிபதி சென்னுக்கு எதிரான தீர்மானம் கொண்டு வரப்படும் என்று தெரிகிறது.