உ.பி இடப் பங்கீடு: காங்-முலாயம் இழுபறி
டெல்லி: உத்தரப் பிரதேசத்தில் மக்களவைத் தேர்தல் இடப் பங்கீடு குறித்து காங்கிரஸ்-சமாஜ்வாடி கட்சிகளுக்கு இடையே நடந்து வரும் பேச்சுவார்த்தைகளில் கடும் இழுபறி நிலவுகிறது.
மூன்றாவது அணியில் இருந்து திடீரென தாவி வந்து மக்களவையில் நடந்த வாக்கெடுப்பில் காங்கிரஸ் தலைமையிலான மத்திய அரசை காப்பாற்றினார் சமாஜ்வாடி கட்சியின் தலைவர் முலாயம் சிங் யாதவ்.
இதையடுத்து இரு கட்சிகளுக்கும் இடையே புதிய நட்புறவு பூத்துள்ளது. உத்தரப் பிரதேசத்தில் மாயாவதியின் அதிரடி அரசியலை சமாளிக்க காங்கிரசுடன் கூட்டணி வைத்தே ஆக வேண்டிய நிலைக்கு முலாயம் தள்ளப்பட்டுள்ளார்.
அதே போல உத்தரப் பிரதேசத்தில் மாயாவதி, முலாயம், பாஜக ஆகியோருக்கு அடுத்த நிலையில் உள்ள காங்கிரசுக்கும் மீண்டும் மத்தியில் ஆட்சியைப் பிடிக்க அந்த மாநிலத்தில் அதிக இடங்களை கைப்பற்ற வேண்டிய கட்டாயம்.
இதையடுத்து முலாயமும் காங்கிரசும் கூட்டணி பேச்சுவார்த்தையை இப்போதே ஆரம்பித்துவிட்டன. இடப் பகிர்வு தொடர்பாக இரு தரப்பினரும் இரு முறை சந்தித்துப் பேசியும் இதுவரை முடிவேதும் எட்டப்படவில்லை.
முதல் கூட்டத்தில் காங்கிரசுக்கு அதிகபட்சம் 8 இடங்கள் மட்டுமே தர முன் வந்தது சமாஜ்வாடி. உத்தரப் பிரதேசத்தில் 80 லோக்சபா தொகுதிகள் இருப்பது குறிப்பிடத்தக்கது.
ஆனால், தனக்கு 40 இடங்களை கேட்டு வருகிறது காங்கிரஸ். இதையடுத்து நேற்று மீண்டும் நடந்த பேச்சுவார்த்தையில் காங்கிரசுக்கு 13 இடங்கள் வரை தர முன் வந்தது சமாஜ்வாடி.
இதை காங்கிரஸ் ஏற்கவில்லை. 30 இடங்களாவது தர வேண்டும், அத்தோடு 10 சதவீத இடங்களில் இரு தரப்புமே வேட்பாளரை நிறுத்தி பிரண்ட்லியாக மோதலாம் என்றும் கூறியது. இதை சமாஜ்வாடி ஏற்கவில்லை.
மோதல் என்றால் மோதல் தான்.. அதில் எப்படி நட்புரீதியாக மோத முடியும் என்று கேட்டுள்ளார் சமாஜ்வாடி கட்சியின் பொதுச் செயலாளர் அமர் சிங்.
மேலும் மத்திய பிரதேசத்திலும் மகாராஷ்டிரத்திலும் இடங்களை பகிர்வது குறித்தும் இரு தரப்பும் பேசி வருகின்றன. அந்த மாநிலத்தில் சமாஜ்வாடிக்கு பேருக்கு ஒரு சில இடங்களை மட்டுமே தர காங்கிரஸ் முன் வந்துள்ளது. அப்படியானால் உத்தரப் பிரதேசத்தில் அதிக இடங்களை நாங்கள் தர முடியாது என முலாயம் கூறிவிட்டார்.
இதனால் இழுபறி நிலவி வருகிறது.