'கரி' பூசிக் கொண்ட விஜயகாந்த்-அதிமுக தாக்கு
சென்னை: 22 வருடங்களுக்கு முன் மின்துறை அமைச்சராக இருந்த பண்ருட்டி ராமச்சந்திரன் எழுதிக் கொடுத்ததை அப்படியே பேசியிருப்பதன் மூலம், அவரது முகத்தில் அவரே கரியைப் பூசிக் கொண்டுள்ளார் விஜயகாந்த் என்று அதிமுக தாக்கியுள்ளது.
மின்வெட்டைக் கண்டித்து கோவையில் நடந்த தேமுதிக ஆர்ப்பாட்டத்தில் பேசிய விஜயகாந்த், அதிமுக ஆட்சியில் மின் உற்பத்தி குறைந்து விட்டதாக கூறியிருந்தார்.
இதற்கு அதிமுக ஆட்சிக்காலத்தில் போக்குவரத்து மற்றும் மின்துறை அமைச்சராக இருந்த நத்தம் ஆர். விஸ்வநாதன் கண்டனம் தெரிவித்துள்ளார்.
இதுதொடர்பாக அவர் விடுத்துள்ள அறிக்கை:
அதிமுக ஆட்சியில் மின் உற்பத்திக்கு திட்டம் தீட்டவில்லை என, கோவையில் நடந்த ஆர்ப்பாட்டத்தில், குடும்ப சகிதமாக அரசியலில் நுழைந்துள்ள விஜயகாந்த் குற்றம் சாட்டியுள்ளார். இது அவரின் அறியாமையையும் முதிர்ச்சி இன்மையையுமே காட்டுகிறது.
2001-06ம் ஆண்டு அதிமுக ஆட்சியில் 500 மெகாவாட் மின்சாரம் அதிகம் உற்பத்தி செய்யப்படும் என ஜெயலலிதா அறிவித்ததாகவும், ஆனால் 310 மெகாவாட் மட்டுமே உற்பத்தி உயர்த்தப்பட்டதாகவும் விஜயகாந்த் கூறியுள்ளார்.
கடந்த 2006ம் ஆண்டு மார்ச் 31ம் தேதி நிலவரப்படி தமிழகத்தின் மின் உற்பத்தி உச்சபட்சமாக 10,011 மெகாவாட் என்ற அளவுக்கு இருந்தது. இது, திமுக அரசால் வெளியிடப்பட்ட 2006-07ம் ஆண்டிற்கான பட்ஜெட் அறிக்கையிலேயே குறிப்பிடப்பட்டுள்ளது.
இதில் மூன்றில் ஒருபங்கு மின்சாரம் அதாவது, 3,347 மெகாவாட், ஜெயலலிதாவின் 10 ஆண்டு ஆட்சியில் புதிதாக உருவாக்கப்பட்டது என்பதை விஜயகாந்த் புரிந்து கொள்ள வேண்டும்.
சட்டசபை உறுப்பினராக உள்ள விஜயகாந்த், நாட்டு நடப்பை தெரிந்துக் கொள்ளாமல், சினிமாவில் முழு நேரத்தையும் செலவிட்டுக் கொண்டு இடைவெளியில் பொழுது போக்கிற்காக இதுபோன்ற ஆர்ப்பாட்டங்களில் கலந்து கொண்டு, 22 வருடங்களுக்கு முன் மின்துறை அமைச்சராக இருந்த பண்ருட்டி ராமச்சந்திரன் எழுதிக் கொடுத்ததை அப்படியே பேசியிருப்பதன் மூலம், அவரது முகத்தில் அவரே கரியைப் பூசிக் கொண்டுள்ளார் என்று கூறியுள்ளார் விஸ்வநாதன்.












Click it and Unblock the Notifications