புதிய வகை ஹெராயின் பறிமுதல்: கம்போடிய நாட்டவர் கைது
சென்னை: சென்னை விமான நிலையத்தில் ஹெராயின் வகையைச் சேர்ந்த எம்பிடமைன் என்ற போதைப் பொருள் சிக்கியது. இதை கடத்திய கம்போடியாவைச் சேர்ந்த சோன்பீத் என்பவர் கைது செய்யப்பட்டார்.
சென்னை விமான நிலையத்தில் அவ்வப்போது போதைப் பொருட்கள் பிடிபடுவது சகஜமாகி விட்டது. இந்த நிலையில் இன்று இதுவரை சிக்கியிராத புதிய வகை ஹெராயின் போதைப் பொருள் சிக்கியது.
கம்போடியாவைச் சேர்ந்தவர் சோன்பீத் (30). இவர் ஒரு வாரத்திற்கு முன்பு சுற்றுலா விசா மூலம் இந்தியாவுக்கு வந்தார். மும்பைக்கு வந்த அவர் அங்கிருந்து டெல்லி சென்றார். பின்னர் நேற்று இரவு சென்னைக்கு வந்து சேர்ந்தார்.
தாய் ஏர்வேஸ் விமானம் மூலம் பாங்காக் செல்ல அவர் திட்டமிட்டிருந்தார். அவர் மீது சந்தேகமடைந்த சுங்கத்துறை அதிகாரிகள், சோன்பீத் வைத்திருந்த உடமைகளை சோதனையிட்டனர். அப்போது கார்பன் தாளில் போதைப் பொருள் மறைத்து வைக்கப்பட்டிருந்தது தெரிய வந்தது.
1.1 கிலோ எடையுள்ள அந்தப் போதைப் பொருளின் பெயர் எம்பிடமைன். இது ஹெராயின் வகையைச் சேர்ந்ததாகவும். இதுவரை இந்த போதைப் பொருள் சென்னையில் சிக்கியதில்லை. இதன் சர்வதேச மதிப்பு ரூ. 1 கோடியாகும்.
போதைப் பொருளை பறிமுதல் செய்த அதிகாரிகள் அதை ஆய்வகச் சோதனைக்கு அனுப்பி வைத்தனர். சோன்பீத் கைது செய்யப்பட்டார்.












Click it and Unblock the Notifications