தஞ்சாவூர் அருகே பஸ்ஸில் பெண்ணுக்கு பிரசவம்
தஞ்சை: தஞ்சை அருகே பயணத்தின்போது பெண்ணுக்கு பிரசவ வலி ஏற்பட்டதால் பஸ்ஸிலேயே பிரசவம் பார்க்கப்பட்டது. அவருக்கு அழகிய ஆண் குழந்தை பிறந்தது.
அரியலூர் மாவட்டம், ஆண்டிப்பட்டிகாடு காலனியைச் சேர்ந்தவர் சேகர். இவரது மனைவி சரிதா (26). நிறைமாத கர்ப்பிணியான சரிதாவை பிரசவத்திற்காக தஞ்சாவூர் அரசு மருத்துவமனைக்கு பஸ்ஸில் அழைத்துச் சென்றார் சேகர்.
அப்போது, பஸ் திருவையாறு பேரூராட்சி அலுவலம் அருகே சென்று கொண்டிருந்தபோது சரிதாவுக்கு பிரசவ வலி அதிகமாகி துடித்தார். உடனே குழந்தை பிறக்கும் நிலை ஏற்பட்டது. இதையடுத்து பயணிகள் இறக்கி விடப்பட்டனர்.
பஸ்ஸில் இருந்த பெண்கள் அனைவரும் சேர்ந்து சரிதாவுக்கு பிரசவம் பார்த்தனர். சிறிது நேரத்தில் சரிதாவுக்கு அழகிய ஆண் குழந்தை பிறந்தது.
இதனையடுத்து அதே பஸ்ஸிலேயே தாயும், சேயும் கொண்டு செல்லப்பட்டு தஞ்சாவூர் அரசு மருத்துவமனையில் சேர்க்கப்பட்டனர்.