ஹஜ்-1.23 லட்சம் யாத்ரீகர்களுக்கு அனுமதி
டெல்லி: ஹஜ் கமிட்டி மூலம் புனித ஹஜ் யாத்திரை மேற்கொள்ளும் பயணிகளின் எண்ணிக்கையை அதிகரிக்க மத்திய அரசு ஒப்புதல் அளித்துள்ளதாக மத்திய தகவல் ஒலிபரப்புத்துறை அமைச்சர் பிரியரஞ்சன் தாஸ்முன்ஷி தெரிவித்துள்ளார்.
இதுகுறித்து அவர் கூறியதாவது:
ஆண்டுதோறும் இந்தியாவிலிருந்து லட்சக் கணக்கான முஸ்லீம்கள் ஹஜ் புனித யாத்திரை மேற்கொண்டு வருகின்றனர். இவர்களுக்கு மத்திய அரசு மானியத்துடன் கட்டணச் சலுகை வழங்கி வருகிறது. இந்த ஆண்டுக்கான ஹஜ் புனித யாத்திரை அக்டோபர் மாதம் முதல், தொடங்கவுள்ளது.
இதையடுத்து, யாத்திரை செல்லும் பயணிகளின் எண்ணிக்கையை 1.10 லட்சத்திலிருந்து, 1.23 லட்சமாக உயர்த்த மத்திய அரசு முடிவு செய்துள்ளது. இதன் மூலம் கூடுதலாக 13,211 பேர் பயனடைவார்கள்.
புனிதப் பயணம் செல்லும் நபர்களிடமிருந்து கட்டணத் தொகையாக ரூ.12,000 மட்டுமே வசூலிக்கப்படும். இது மட்டுமின்றி, யாத்திரை செல்லும் நபர்களின் வசதியைக் கருத்தில் கொண்டு, ஏற்கனவே உள்ள 16 புறப்படும் மையங்களுடன், இந்தூரிலிருந்தும் தங்கள் பயணத்தை தொடங்க ஏற்பாடுகள் செய்யப்பட்டுள்ளன.
பயணக் கட்டணத்தில் எந்தவிதமான மாற்றங்களும் செய்யப்படவில்லை என்றார்.












Click it and Unblock the Notifications