இந்தியாவின் வறுமை 27.5 சதவிகிதமாக குறைவு: ஐநா
டெல்லி: சுகாதாரம், ஆரம்பக் கல்வி என பொருளாதாரத்தை நிர்ணயிக்கும் முக்கியத் துறைகளில் குறிப்பிடத்தக்க வளர்ச்சியை அடைந்துள்ளதால், இந்தியாவின் வறுமை 27.5 சதவிகிதமா குறைந்துள்ளதாக ஐக்கிய நாடுகள் சபை அறிவித்துள்ளது.
இதேநிலை தொடர்ந்தால் வரும் 2015-ம் ஆண்டுக்குள் இந்தியாவில் மேலும் 19 சதவிகித மக்கள் வறுமையிலிருந்து விடுபடும் வாய்ப்புள்ளதாக ஐ.நா தெரிவித்துள்ளது.
இந்த ஆயிரமாவது ஆண்டில் உலகம் சாதிக்க வேண்டியவை குறித்து ஐநா வெளியிட்டுள்ள அறிக்கையை, டெல்லியில் வெளியிட்ட மக்களவை சபாநாயகர் சோம்நாத் சாட்டர்ஜி கூறியதாவது:
ஐநாவின் சமீபத்திய அறிக்கையின்படி, இந்தியாவில் வளர்ச்சிக்கான சாத்தியம் மற்றும் காரணிகள் ஏராளம் உள்ளன. ஆனால் இப்போது இந்தியாவுக்குத் தேவையானதெல்லாம் நல்ல ஆட்சிமுறை மற்றும் அதற்கு தோள்கொடுக்கக் கூடிய அமைப்புகள்தான்.
இந்த மில்லினியம் ஆண்டில் கிட்டத்தட்ட நமது இலக்குகளில் பாதியை நாம் அடைந்துவிட்டோம். அடுத்த ஐந்தாண்டுகளில் முழு இலக்கையும் அடைய தீவிர முயற்சிகளை மேற்கொள்ள வேண்டியுள்ளது, என்றார்.
இதேபோல எய்ட்ஸ் ஒழிப்பிலும் தீவிர கவனம் செலுத்த வேண்டியுள்ளது. சுத்தமான குடிநீர், மக்களுக்கு சுகாதாரமான வாழ்க்கைச் சூழலை உண்டாக்கித் தருவது போன்றவற்றிலும் இந்தியா கவனம் செலுத்த வேண்டும் என இந்த அறிக்கையில் கூறப்பட்டுள்ளது.
அதேநேரம், பெருகி வரும் விலைவாசி உயர்வு மேலும் 10 கோடி மக்களை வறுமைக்குத் தள்ளிவிடும் அபாயம் உள்ளதாகவும் ஐநா எச்சரித்துள்ளது.
உண்மையான பொருளாதார வளர்ச்சியை அடைய விலைகளைக் கட்டுக்குள் வைத்திருக்க வேண்டியது அவசியம் என்றும் கூறப்பட்டுள்ளது.












Click it and Unblock the Notifications