மகளிர் சுய உதவிக் குழு செயல்பாடுகளுக்கு ஸ்டாலின் பாராட்டு
விருதுநகர்: தமிழ்நாட்டு மகளிர் சுய உதவிக் குழுக்கள்தான் நாட்டில் முதலிடத்தில் உள்ளன. அவர்கள் நம்பிக்கைக் கொண்டு அதிகளவில் கடன்களை வழங்கி வருகிறது இந்தியன் வங்கி என்று பாராட்டியுள்ளார் உள்ளாட்சித் துறை அமைச்சர் மு.க.ஸ்டாலின்.
அரசு சார்பில் மகளிர் சுய உதவிக் குழுக்களுக்கு சுழல் நிதி, நலத்திட்ட உதவிகள் வழங்குதல் மற்றும் குடிநீர் திட்டங்களுக்கான அடிக்கல் நாட்டு விழா விருதுநகரில் நடந்தது. கலெக்டர் சந்திரசேகரன் வரவேற்றார்.
விழாவில் கலந்து கொண்டு, நலத்திட்ட உதவிகள் வழங்கிய பின்னர் அமைச்சர் ஸ்டாலின் பேசியதாவது:
இந்த விழாவில் 4,193 திட்டப்பணிகளுக்கு, ரூ.58.54 கோடி மதிப்பீட்டில் அடிக்கல் நாட்டு விழா நடந்துள்ளது. மேலும், 1,500 மகளிர் சுய உதவிக் குழுக்கள் பயன்பெறும் வகையில் நிதி உதவி வழங்கப்படுகிறது. இந்த குழுக்கள் தேர்தலுக்கு பயன்படுத்துவதற்காக தொடங்கப்படவில்லை.
தமிழகத்தில் பெண்களின் தன்னம்பிக்கையை வளர்த்து, அவர்கள் யார் தயவையும் எதிர்பாராமல் சுயமாக வாழ வேண்டும் என்பதற்காகவும், அவர்கள் சிறு தொழில்கள் தொடங்கி வாழ்க்கையை வளப்படுத்திக் கொள்ளவும் சுய உதவி குழுக்கள் தொடங்கப்பட்டன.
தமிழ்நாட்டில் மூன்று லட்சத்து 70,212 சுய உதவிக் குழுக்கள் உள்ளன. இவைகளின் மொத்த சேமிப்பு தொகை இதுவரை ரூ. 1,826 கோடி. இந்தியாவிலேயே தமிழகத்தில் உள்ள சுய உதவிக் குழுக்கள்தான் முதலிடம் வகிக்கின்றன.
வங்கிகளில் வாங்கும் கடனை மகளிர் சுய உதவிக் குழுக்கள்தான் திருப்பி செலுத்துகின்றன. இந்தியன் வங்கி நாடு முழுவதும் உள்ள மகளிர் சுய உதவிக் குழுக்களுக்கு ரூ.1,824 கோடி கடன் வழங்கியது. இதில், ரூ.1,058 கோடி தமிழக குழுக்களுக்குத்தான் வழங்கியுள்ளது.
தமிழகப் பெண்கள், கடனை ஒழுங்காக திருப்பி செலுத்திவிடுவார்கள் என்று நம்பிக்கையில்தான் இந்த வங்கி இவ்வளவு கடன் வழங்கியுள்ளது. பெண்களுக்கு சம உரிமை மற்றும் ஆரம்பப் பள்ளிகளில் பெண்களைத்தான் ஆசிரியர்களாக நியமிக்க வேண்டும் போன்ற பல திட்டங்களை முதல்வர் கருணாநிதி கொண்டு வந்தார்.
பெண்களுக்காக, முதல்வர் கருணாநிதி அற்புதமான திட்டங்களை உருவாக்கி தருகிறார். அவைகளைப் பெண்கள் சிறப்பாக பயன்படுத்திக் கொள்ள வேண்டும் என்றார்.












Click it and Unblock the Notifications