பாகிஸ்தானுக்குள் புகுந்து தீவிரவாதிகளை தாக்க புஷ் உத்தரவு

பாகிஸ்தான், ஆப்கானிஸ்தான் எல்லையில் நிலை கொண்டுள்ள தலிபான் மற்றும் அல் கொய்தா தீவிரவாதிகளை, ஆப்கானிஸ்தானில் நிலை கொண்டுள்ள அமெரிக்க படைகள் அவ்வப்போது ஏவுகணை வீசியும், விமானம் மூலமும் தாக்குதல் நடத்தி வருகின்றன.
இந்த நிலையில் தரை மார்க்கமாக, பாகிஸ்தானுக்குள் புகுந்து தீவிரவாதிகள் தாக்கி ஒழிக்க அதிபர் புஷ் உத்தரவிட்டுள்ளார். இது பாகிஸ்தான் அரசுக்கு பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.
இந்த தாக்குதலுக்கு பாகிஸ்தான் அரசிடம் எந்த அனுமதியையும் பெறத் தேவையில்லை. தாக்குதல் நடத்த வேண்டும் என்று தோன்றினால் உடனே அதை செய்யுங்கள் என அமெரிக்க ராணுவத்திற்கு புஷ் உத்தரவிட்டுள்ளதாக கூறப்படுகிறது.
அவ்வப்போது பாகிஸ்தான் எல்லைக்குள் அமெரிக்க படை நடத்தி வரும் தாக்குதல்களால் ஏற்கனவே பாகிஸ்தான் கடுப்புடன் உள்ளது. இந்த நிலையில் தரை மார்க்கமாவும் பாகிஸ்தானுக்குள் புகுந்து தாக்க அமெரிக்க படைகளுக்கு புஷ் உத்தரவிட்டுள்ளது, பாகிஸ்தானை கோபமடைய செய்துள்ளது.
கடந்த ஜூலை மாதம் இந்த உத்தரவை புஷ் பிறப்பித்ததாக நியூயார்க் டைம்ஸ் செய்தி வெளியிட்டுள்ளது. இந்த உத்தரவுர ரகசியம் என்ற பட்டியலின் கீழ் வைக்கப்பட்டுள்ளதால் இதுகுறித்து தகவல் வெளி வராமல் ள்ளது. இருப்பினும் அந்த ரகசிய உத்தரவை நியூயார்க் டைம்ஸ் வெளியிட்டு பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
ஈராக், ஆப்கானிஸ்தானில் தீவிரவாத ஒழிப்பில் ஈடுபடுவது போல பாகிஸ்தானிலும் தீவிரவாத ஒழிப்பில் ஈடுபட வேண்டும் என புஷ் நிர்வாகம் தீர்மானித்துள்ளதாம். மேலும் பாகிஸ்தானில் குறிப்பிட்ட பகுதிகளை தனது தீவிர கண்காணிப்பில் கொண்டு வந்துள்ள புஷ் அரசு, அப்பகுதிகளில் என்ன மாதிரியான தாக்குதல்களை வேண்டுமானாலும் நடத்திக் கொள்ளலாம் என தனது படைக்கு உத்தரவிட்டுள்ளது.
இதன் மூலம் ஈராக், ஆப்கானிஸ்தானுக்கு அடுத்து பாகிஸ்தானையும் அமெரிக்கா தனது கட்டுப்பாட்டுக்குக் கொண்டு தீவிரவாதிகள் மீது பெரும் தாக்குதலை தொடுக்கக் கூடும் என்ற அச்சம் பாகிஸ்தானில் எழுந்துள்ளது.
இதுகுறித்து அமெரிக்க மூத்த அதிகாரி ஒருவர் கூறுகையில், பாகிஸ்தானின் எல்லைப் பகுதியில் தீவிரவாதிகளின் அட்டகாசம் தாங்க முடியவில்லை. அவர்களைப் பொறுத்துக் கொள்ள முடியாத அளவுக்கு நிலைமை போய் விட்டது. அவர்கள் மீது இரும்புக் கரம் கொண்டு நடவடிக்கை எடுக்க வேண்டிய கட்டம் வந்து விட்டது. அதற்கான உரிய உத்தரவுகள் பிறப்பிக்கப்பட்டுள்ளன என்றார்.
அதன்படி பாகிஸ்தானுக்குள் புகுந்து தாக்குதல் நடத்தும் மிகப் பெரிய சாட்டை அமெரிக்க படையினருக்கு வழங்கப்பட்டுள்ளது. அதேசமயம், தாக்குதல் நடத்திய பின்னர் அதுகுறித்து பாகிஸ்தான் அரசிடம் தெரிவித்து விடுமாறும் படையினருக்கு அமெரிக்க அரசு அறிவுறுத்தியுள்ளதாம். அதாவது முதலில் அடி, பிறகு தகவல் என்ற ரீதியில் செயல்படுமாறு அமெரிக்க படையினருக்கு அறிவுறுத்தப்பட்டுள்ளது.
அமெரிக்காவின் இந்த முடிவினால் ஏற்கனவே தீவிரவாத ஒழிப்பு என்ற பெயரில் பாகிஸ்தான் எல்லைக்குள் நடத்தப்பட்டு வரும் அமெரிக்க தாக்குதலால் கோபமடைந்துள்ள பாகிஸ்தானுக்கும், அமெரிக்காவுக்கும் இடையிலான இடைவெளி மேலும் அதிகரிக்கும் என நம்பப்படுகிறது.












Click it and Unblock the Notifications