5 நாள் பயணம்: 23ல் அமெரிக்கா செல்கிறார் மன்மோகன் சிங்
{image-manmohan with bush250_12092008.jpg tamil.oneindia.com}வாஷிங்டன்: இந்திய-அமெரிக்க அணு சக்தி இறுதி ஒப்பந்தத்தில் கையெழுத்திடுவதற்காக பிரதமர் மன்மோகன் சிங் வருகிற 23ம் தேதி ஐந்து நாள் பயணமாக அமெரிக்கா செல்கிறார்.
மெரிக்காவுடனான அணு ஒப்பந்தத்துக்கு ஐஏஇஏ, என்எஸ்ஜி ஆகியவற்றில் ஒரு வழியாக அனுமதி கிடைத்துவிட்டது.
இப்போது அதற்கு அமெரிக்க நாடாளுமன்றம் ஒப்புதல் தர வேண்டும். இந்த ஒப்புதல் கிடைத்துவிட்டால் இரு நாடுகளும் ஒப்பந்தத்தில் கையெழுத்திடலாம்.
இந் நிலையில் இந்தியஅமெரிக்க அணு சக்தி ஒப்பந்தத்தை நிறைவேற்றுவதற்கான இறுதி நடவடிக்கையாக, அணு ஒப்பந்தத்துக்கு அனுமதி கோரும் வகையில், 123 ஒப்பந்தத்தை அந்நாட்டு நாடாளுமன்றத்துக்கு அனுப்பியுள்ளார் அதிபர் ஜார்ஜ் புஷ்.
புஷ்ஷின் பதவிக் காலம் இந்தாண்டு இறுதிக்குள் முடிகிறது. அவரது அரசின் கடைசி நாடாளுமன்ற கூட்டத் தொடர் தற்போது நடந்து வருகிறது. இதையடுத்து தனது பதவிக் காலத்திலேயே ஒப்புதலைப் பெற்று ஒப்பந்தத்திலும் கையெழுத்திடுவதில் தீவிரமாக உள்ளார் புஷ்.
இந்தச் சூழ்நிலையில் பிரதமர் மன்மோகன் சிங் ஐந்து நாள் பயணமாக வருகிற 23ம் தேதி அமெரிக்காவுக்கு செல்கிறார். 27ம் தேதி வரை அவர் அமெரிக்காவில் சுற்றுப்பயணம் செய்கிறார். இதில் 25ம் தேதி அதிபர் புஷ்ஷை சந்திக்கிறார்.
25ம் தேதி தன்னை சந்திக்குமாறு சிங்குக்கு புஷ் அழைப்பு விடுத்துள்ளதை ஏற்று அன்று அவரை சிங் சந்திக்கிறார். அப்போது அணு சக்தி ஒப்பந்தம் தொடர்பான இறுதிக் கையெழுத்தை அவர்கள் போடுவார்கள் எனத் தெரிகிறது.
அமெரிக்க நாடாளுமன்றத்தின் கடைசிக் கூட்டம் வருகிற 26ம் தேதியுடன் முடிகிறது. அதற்குள் அணு சக்தி ஒப்பந்தத்திற்கு அனுமதி கிடைப்பதில் ஒரு சிக்கல் உள்ளது. அமெரிக்க நாடாளுமன்ற விதிமுறைப்படி ஒரு ஒப்பந்தத்த அமெரிக்க நாடாளுமன்றத்தின் ஒப்புதல் கோரி சமர்ப்பித்தால் குறைந்தது ஒரு மாதம் கழித்துத்தான் அதன் மீது விவாதம் நடத்தப்படும். ஆனால் இந்திய - அமெரிக்க அணு சக்தி ஒப்பந்தம் தொடர்பான 123 ஒப்பந்தம் இப்போதுதான் தாக்கல் செய்யப்பட்டுள்ளது.
இருப்பினும் இதற்கு விசேஷ அனுமதி பெற்று இந்த தொடருக்குள்ளேயே அனுமதியைப் பெற புஷ் நிர்வாகம் முயன்று வருகிறது. இதற்கு எதிர்க்கட்சியான ஜனநாயகக் கட்சியின் ஒத்துழைப்பு தேவைப்படுகிறது. இதற்காக ஜனநாயகக் கட்சியின் உதவியை புஷ் அரசு நாடியுள்ளது.
அவர்களும் ஒத்துழைப்பதாக உறுதியளித்துள்ளனர். எனவே புஷ் பதவிக்காலம் முடிவதற்குள்ளாகவே இந்திய - அமெரிக்க அணு சக்தி ஒப்பந்தம் உயிர் பெறும் என எதிர்பார்க்கப்படுகிறது.
இதை மனதில் வைத்துத்தான் 25ம் தேதி தன்னை வந்து சந்திக்குமாறு பிரமதருக்கு புஷ் கோரிக்கை விடுத்துள்ளார் என்று தெரிகிறது.












Click it and Unblock the Notifications