24 மணி நேர மருத்துவ நிலையங்களாக மாறும் ஆரம்ப சுகாதார மையங்கள்
சென்னை: செப்டம்பர் 15ம் தேதி முதல் தமிழகத்தில் உள்ள 1421 ஆரம்ப சுகாதார மையங்களும், 24 மணி நேரமும் பிரசவம் பார்க்கும் முழு நேர மருத்துவ நிலையங்களாக தரம் உயருகின்றன.
இந்த ஆரம்ப சுகாதார மையங்களில் கர்ப்பிணிகளுக்கு இலவச உணவும் வழங்கப்படும். கடந்த சட்டசபைக் கூட்டத் தொடரில் இதுதொடர்பான அறிவிப்பை சுகாதாரத்துறை அமைச்சர் எம்.ஆர்.கே.பன்னீர்செல்வம் வெளியிட்டிருந்தார். தற்போது அண்ணா பிறந்த நாள் நூற்றாண்டு விழாவையொட்டி இந்தத்திட்டம் செப்டம்பர் 15 முதல் அமலுக்கு வருகிறது.
முதல்வர் கருணாநிதி இதை தொடங்கி வைக்கிறார். இந்த சேவை தற்போது 1000 ஆரம்ப சுகாதார மையங்களில் அமலில் உள்ளது. செப்டம்பர் 15ம் தேதி முதல் அனைத்து ஆரம்ப சுகாதார மையங்களுக்கும் இது விரிவுபடுத்தப்படுகிறது.
அன்று முதல் பிரசவத்திற்காக வரும் கர்ப்பிணிப் பெண்கள் அனைவருக்கும் 24 மணி நேரமும் இங்கு பிரசவம் பார்க்கப்படும். மேலும், ஒரு நாளைக்கு மூன்று நேரம் சாப்பாடும் இலவசமாக வழங்கப்படும்.
ஆரம்ப சுகாதார மையங்கள் ஆண்டுக்கு 50 ஆயிரம் குடும்பக் கட்டுப்பாட்டு அறுவைச் சிகிச்சைகளையும், 2.5 லட்சம் பிரசவங்களையும் மேற்கொள்கின்றன.
ஆரம்ப சுகாதார மையங்களில் இலவச உணவு வழங்கும் திட்டத்திற்கு தமிழக அரசு ரூ. 1.61 கோடி நிதியை ஒதுக்கியுள்ளது.
மேலும் ஆரம்ப சுகாதார மையங்களில் ஸ்கேனிங் செய்ய வரும் கர்ப்பிணிப் பெண்களுக்கு வாரம் ஒரு முறை மதிய உணவு இலவசமாக வழங்கப்படும். இதற்காக ரூ. 25.50 லட்சம் நிதி, தேசிய ஊரக நல்வாழ்வுத் திட்டத்தின் கீழ் ஒதுக்கப்பட்டுள்ளது.












Click it and Unblock the Notifications