தீவிரவாதிகளைப் பார்த்த சிறுவன்: போலீஸ் விசாரணை
டெல்லி: கன்னாட் பிளேஸ் பகுதியில் தீவிரவாதி குண்டு வைத்தபோது அதை நேரில் பார்த்ததாக கூறப்படும் 12 வயது சிறுவனை ரகசிய இடத்தில் வைத்து போலீஸார் விசாரணை நடத்தி வருகின்றனர். சந்தேகத்திற்குரிய 6 பேரும் போலீஸ் வலையில் சிக்கியுள்ளனர்.
டெல்லியை நேற்று மாலை உலுக்கிய தொடர் வெடிகுண்டுச் சம்பவம் தொடர்பாக பல்வேறு தனிப்படைகள் அமைக்கப்பட்டு போலீஸார் தீவிர விசாரணையில் இறங்கியுள்ளனர்.
சந்தேகத்திற்குரிய 6 பேரை கஸ்டடியில் வைத்து போலீஸார் விசாரித்து வருகின்றனர். இந்த நிலையில் முக்கிய சாட்சியமாக 12 வயது சிறுவன் கிடைத்துள்ளான்.
கன்னாட் பிளேஸ் பகுதியில் தீவிரவாதிகள் வெடிகுண்டுகளை வைத்தபோது அதை இந்த சிறுவன் நேரில் பார்த்ததாக கூறப்படுகிறது. இதையடுத்து அந்த சிறுவனை முக்கிய சாட்சியாக கருதும் போலீஸார், ரகசிய இடத்திற்கு அழைத்துச் சென்ற அந்த தீவிரவாதிகளின் அடையாளங்கள் குறித்து கேட்டு வருகின்றனர். அதை வைத்து கம்ப்யூட்டர் மூலம் படம் வரைந்து அவற்றைக் கொண்டு தீவிரவாதிகளைப் பிடிக்க போலீஸார் முயற்சிக்கவுள்ளனர்.