சிரஞ்சீவி கட்சியில் இணைந்த தெலுங்கு தேச தலைவர்
ஹைதராபாத்: தெலுங்குதேசம் கட்சிக்கு இன்னொரு அடியாக, அக்கட்சியைச் சேர்ந்த மூத்த தலைவர் சி.ராமச்சந்திரய்யா, சிரஞ்சீவியின் பிரஜா ராஜ்ஜியம் கட்சியில் இணைந்துள்ளார்.
தெலுங்குதேசம் கட்சியின் பொலிட்பீரோ உறுப்பினராக இருந்தவர் ராமச்சந்திரய்யா. அக்கட்சியின் ராஜ்யசபா உறுப்பினராகவும் இருந்தார். இந்த நிலையில் சமீபத்தில் அவர் தெலுங்குதேசத்திலிருந்து விலகினார்.
நேற்று சிரஞ்சீவியின் பிரஜா ராஜ்ஜியம் கட்சியில் தன்னை இணைத்துக் கொண்ார் ராமச்சந்திரய்யா.
இதுகுறித்து அவர் கூறுகையில், சிரஞ்சீவியின் உருவில் என்.டி.ஆரை காண்கிறேன்.
என்.டி.ஆர். உருவாக்கிய கொள்கைகளிலிருந்து தெலுங்குதேசம் விலகி விட்டது. சிரஞ்சீவியால் மட்டுமே ஊழலற்ற அரசைக் கொடுக்க முடியும். அக்கட்சிதான் சமூகத்தில் நலிவடைந்த பிரிவினரின் நலனுக்காக உழைக்க முடியும் என்றார் ராமச்சந்திரய்யா.
ராமச்சந்திரய்யா கடப்பா மாவட்டத்தைச் சேர்ந்தவர். இந்த மாவட்டத்தைச் சேர்ந்தவர்தான் முதல்வர் ராஜசேகர ரெட்டி என்பது குறிப்பிடத்தக்கது.
ஏற்கனவே பூமா நாகி ரெட்டி, சோபா நாகி ஆகியோர் தெலுங்கு தேசத்தை விட்டு விலகிய நிலையில், இப்போது ராமச்சந்திரய்யாவும் விலகியுள்ளது அக்கட்சிக்கு பெரும் பின்னடைவாக கருதப்படுகிறது.
ராயலசீமா பகுதியில் ராமச்சந்திரய்யாவுக்கு நல்ல செல்வாக்கு உள்ளது. அவரது விலகலால் அப்பகுதியில் தெலுங்கு தேசத்திற்குப் பின்னடைவு ஏற்படும் என கருதரப்படுகிறது.
தெலுங்கு தேசம் உருவாக்கப்பட்டது முதலே அக்கட்சியில்இருந்து வந்தவர் ராமச்சந்திரய்யா. கடப்பா தொகுதியிலிருந்து 1985ம் ஆண்டு சட்டசபைக்கு தேர்ந்தெடுக்கப்பட்டார். 1988ம் ஆண்டு முதல் ராஜ்யசபாவுக்கும் தேர்ந்தெடுக்கப்பட்டவர்.
இவருக்கு முன்பாக முன்னாள் தெலுங்கு தேச அமைச்சர்கள் சீதாராம், வித்யாதர் ராவ் ஆகியோரும் அக்கட்சியிலிருந்து விலகி சிரஞ்சீவி கட்சியில் சேர்ந்துள்ளனர் என்பது குறிப்பிடத்தக்கது.