அகமதாபாத், பெங்களூர், டெல்லியில் ஒரே குண்டுகள்!
டெல்லி: அகமதாபாத், பெங்களூர், ஜெய்ப்பூரில் வெடித்த குண்டுகளுக்கும், சூரத் நகரில் வெடிக்காமல் கண்டுபிடிக்கப்பட்ட குண்டுகளுக்கும், டெல்லியில் வெடித்த குண்டுகளுக்கும் இடையே ஒற்றுமை இருப்பது ெதரிய வந்துள்ளது.
டெல்லி குண்டுவெடிப்பு தொடர்பான விசாரணையை டெல்லி போலீஸார் முடுக்கி விட்டுள்ளனர். இதுவரை 8 பேரைப் பிடித்து விசாரித்து வருகின்றனர். வெடிகுண்டு வைத்த நபர்களைப் பார்த்ததாக கூறப்படும் 12 வயது சிறுவனையும் போலீஸார் விசாரித்து வருகின்றனர்.
பெங்களூர், ஜெய்ப்பூர், அகமதாபாத் ஆகிய நகரங்களில் இந்த ஆண்டு நடந்த வெடிகுண்டுச் சம்பவங்களுக்குப் பின்னர் நடந்துள்ள 4வது மிகப் பெரிய குண்டுவெடிப்புச் சம்பவம் டெல்லிதான்.
இந்த நான்கு நகரங்களிலும் மற்றும் சூரத்திலும் ஒரே மாதிரியான குண்டுகளே பயன்படுத்தப்பட்டிருப்பது தெரிய வந்துள்ளது.
குண்டுவெடிப்பு வழக்கில் சில முக்கிய துப்பு கிடைத்துள்ளதாக டெல்லி போலீஸ் வட்டாரம் தெரிவிக்கிறது. இதன் அடிப்படையில் தற்போது விசாரணை முடுக்கி விடப்பட்டிருப்பதாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.
டெல்லி, மும்பையில் பல்வேறு இடங்களில் ரெய்டுகளும், விசாரணைகளும் நடந்து வருகின்றன. விரைவில் குண்டுவெடிப்புக்கு காரணமான நபர்கள் குறித்து உறுதியாக தெரிய வரும் என போலீஸார் நம்பிக்கை தெரிவித்துள்ளனர்.
இந்தியன் முஜாஹிதீன் பெயரில் அனுப்பப்பட்ட இ மெயில் குறித்தும் போலீஸார் விசாரணை நடத்தி வருகின்றனர். மும்பை போலீஸார் இதுதொடர்பாக இ மெயில் அனுப்பப்பட்ட நிறுவனமான கம்ரான் பவர் பிரைவேட் லிமிடெட் நிறுவனத்தின் உரிமையாளர்களிடம் விசாரணை நடத்தி வருகின்றனர். அந்த நிறுவனத்தின் அலுவலகம் மூடி சீல் வைக்கப்பட்டுள்ளது.












Click it and Unblock the Notifications