வணிகர்கள் கடையடைப்பு போராட்டத்திற்கு சிபிஎம் ஆதரவு
மதுரை: வணிகர்கள் கடையடைப்பு போராட்டத்துக்கு மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி ஆதரவு தெரிவித்துள்ளது.
தமிழகத்தில் நிலவி வரும் மின்வெட்டு காரணாமாக தொழில்கள், விவசாயம், வர்த்தகர்கள், மாணவர்கள் என அனைத்து தரப்பினரும் பாதிக்கப்பட்டுள்ளனர்.
எனவே, மத்திய அரசிடமிருந்து கூடுதல் மின்சாரத்தை பெறுவது, தமிழகத்தில் மின் உற்பத்தியை பெருக்குவது, மின்சார விரயத்தைத் தடுத்தல், தமிழகமெங்கும் அனைத்து தொழில்களுக்கும், மக்களுக்கும் தடையின்றி சீரான மின்சாரத்தை வழங்க வேண்டும் என்று வலியுறுத்தி பல்வேறு அமைப்புகள் போராட்டம் நடத்தி வருகின்றன.
இந்த நிலையில் மின்வெட்டை உடனே ரத்து செய்ய வேண்டும், பெட்ரோல், டீசல் தட்டுப்பாட்டை சரிசெய்து, தடையின்றி விநியோகம் செய்ய வேண்டும், விலைவாசி உயர்வை கட்டுப்படுத்த வேண்டும் என்பது உள்பட பல்வேறு கோரிக்கைகளை வலியுறுத்தி வரும் 16ம் தேதி தமிழகம் முழுவதும் கடையடைப்பு போராட்டத்தை வணிகர் சங்கங்களின் பேரவை அறிவித்துள்ளது.
இந்த போராட்டத்திற்கு மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி ஆதரவு தெரிவித்துள்ளது. இதுகுறித்து அக்கட்சியின் தமிழ்நாடு மாநில செயற்குழு கூறுகையில், போராட்டத்துக்கு சிபிஎம் தனது முழு ஆதரவை அளிக்கும் என கூறியுள்ளது.