தமிழகம் முழுவதும் உஷார் நிலை - விடிய விடிய ரெய்டு
சென்னை: டெல்லி குண்டுவெடிப்பைத் தொடர்ந்து தமிழகம் முழுவதும் போலீஸார் உஷார் நிலையில் வைக்கப்பட்டுள்ளனர். முக்கிய நகரங்களில் விடிய விடிய போலீஸார் சோதனை நடத்தி முன்னெச்சரிக்கை நடவடிக்கையாக பலரைக் கைது செய்தனர்.
டெல்லி தொடர் குண்டுவெடிப்பைத் தொடர்ந்து தமிழகத்திலும் பாதுகாப்பு பலப்படுத்தப்பட்டுள்ளது. சென்னை, மதுரை, கோவை, திருச்சி, திருநெல்வேலி உள்ளிட்ட அனைத்து முக்கிய நகரங்களிலும் பாதுகாப்பு பல மடங்கு அதிகரிக்கப்பட்டுள்ளது.
ரயில் நிலையங்கள், விமான நிலையங்கள், கோவில்கள் உள்ளிட்ட வழிபாட்டுத் தலங்கள், வணிக வளாகங்கள், முக்கிய கட்டடங்கள் உள்ளிட்டவற்றுக்கு பலத்த பாதுகாப்பும், தீவிர கண்காணிப்பும் மேற்கொள்ளப்பட்டு வருகிறது.
முக்கிய நகரங்களின் எல்லைகளில் சோதனைச் சாவடிகள் அமைக்கப்பட்டு தீவிர வாகன சோதனை நடந்து வருகிறது. நகருக்குள் வரும் வாகனங்கள், வெளியில் செல்லும் வாகனங்கள் தீவிரமாக பரிசோதிக்கப்படுகின்றன.
சென்னையில் உள்ள மயிலை கபாலீஸ்வரர் கோயில், திருவல்லிக்கேணி பார்த்தசாரதி கோயில், மதுரை மீனாட்சியம்மன் கோயில், தஞ்சை பெரிய கோயில், நெல்லை நெல்லையப்பர் கோயில் போன்ற முக்கியமான கோயில்களுக்கு போலீஸ் பாதுகாப்பு அதிகரிக்கப்பட்டது.
சென்னையில் மக்கள் கூடும் இடங்களான சென்ட்ரல், எழும்பூர் ரெயில் நிலையங்கள், கோயம்பேடு பேருந்து நிலையம், திரையரங்குகள், வணிக வளாகங்கள் ஆகிய இடங்களில் போலீசார் பாதுகாப்பு பணியில் ஈடுபட்டு வருகின்றனர். சந்தேகத்திற்கிடமானவர்களை பிடித்து விசாரித்து வருகின்றனர்.
நேற்று இரவு காவல்துறை ஆணையர் சேகர் தலைமையில் சென்னை முழுவதும் வாகன தணிக்கை சோதனையும், லாட்ஜுகள், ஓட்டல்கள் ஆகியவற்றில் சோதனையும் நடைபெற்றது.
இந்த சோதனையில் மொத்தம் 408 பேரை போலீசார் கைது செய்துள்ளனர். அதிக வேகத்தில் வாகனம் ஓட்டியதாக 164 பேர் மீதும், குடிபோதையில் வாகனம் ஓட்டியதாக 68 பேர் மீதும், பழைய குற்றவாளிகள் 15 பேரையும் போலீசார் பிடித்து வழக்குப்பதிவு செய்தனர். தொடர்ந்து பாதுகாப்பு சோதனைகள் நடந்து வருகிறது.












Click it and Unblock the Notifications