ரஷ்யாவில் மலையில் மோதி விமானம் நொறுங்கியது - 88 பேர் பலி
மாஸ்கோ: ரஷ்யாவில் மலை மீது மோதி விமானம் விபத்துக்குள்ளானதில் 88 பேர் உயிரிழந்தனர்.
ரஷ்யாவின் முன்னணி விமான நிறுவனம் ஏரோபிளாட். இந்த நிறுவனத்துக்குச் சொந்தமான போயிங் 737 விமானம் மாஸ்கோ அருகில் உள்ள ஷெரிமெட்யேவோ விமான நிலையத்தில் இருந்து 88 பயணிகளை ஏற்றிக் கொண்டு புறப்பட்டது.
இந்திய நேரப்படி இன்று அதிகாலை 2.42 மணிக்கு விமானம் புறப்பட்டுள்ளது. சிறிது நேரம் கழித்து விமான தொடர்பு துண்டிக்கப்பட்டது.
இதையடுத்து தேடுதல் பணி முடுக்கி விடப்பட்டது. அப்போது, விமானம் பெர்ம் நகருக்கு அருகே ஊரல் மலைத் தொடரில் மோதி வெடித்து சிதறியது தெரிய வந்தது.
விமானத்தில் 83 பயணிகள், பைலட் மற்றும் இதர ஊழியர்கள் உள்பட 88 பேர் இருந்தனர். அனைவரும் உயிரிழந்திருப்பார்கள் என நம்பப்படுகிறது.
தகவலறிந்த மீட்பு படையினர் சம்பவ இடத்துக்கு விரைந்துள்ளனர். இந்த விமான விபத்தால் சைபீரியன் பகுதியில் உள்ள ரயில்வே போக்குவரத்து பாதிக்கப்பட்டுள்ளது.